திருமணம் வரத்துடன் குலம் சிறந்து விளங்கவும் துன்பமும் ஏற்பட்டுவிடாமல் சிறப்பாக குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் வேண்டுதல்களை நிறைவேற்ற உருவானது திருத்தலம் திருச்சியில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோவில்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்டது இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது. பல்லவர் ஆட்சி காலத்தில் மகேந்திரவர்மனால் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே திருப்பணி செய்யப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. ஐந்து பிராகாரங்களுடன் உள்ள இந்த ஆலயம், தில்லையில் தாம் கொண்டிருந்த ஆனந்த தாண்டவக் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இங்கு காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் என்றும் போற்றப்படுகிறது.
லிவனேசுவரர் ஆலயம்
சுவேதகிரி, தென்கைலாயம், ஞீலிவனம், சுவேத கிரி, கதலிவனம், அரம்பை வனம், விமலாரண்யம், தரளகிரி, வியாக்ரபுரி, வாழைவனநாதர், லாலிகெடி என்ற பெயர்களாலும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
கோவில் அறிவிப்பு பலகை
வரலாற்றை விளக்கும் ஓவியம்
திருமண வரம், பிள்ளை பாக்கியம் ஆகிய வரங்களோடு நீண்ட ஆயுளை அளித்து பேரன், பேத்திகளோடு கூடி வாழும் யோகத்தையும் அளிப்பவர் ஸ்ரீஞீலிவனநாதர். மார்க்கண்டேயரின் ஆயுளைப் பறிக்க வந்த எமனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார் சிவன். எமன் இல்லாத இந்த உலகம், மரணமே இல்லாமல் சகல ஜீவன்களும் பெருகியபடியே இருந்ததாம். இதனால் கவலை கொண்ட பூமாதேவி, சிவபெருமானிடம் முறையிட அவரும் இந்த தலத்தில் எமனுக்கு பாவவிமோசனம் அளித்து அருள் செய்தார்.
எனவே, இந்த கோவிலில் எமனுக்கும் தனி சந்நிதி காணப்படுகிறது. சிவனின் ஆணைக்கு ஏற்ப இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு யம பயம், அகால துர்மரண பயம் ஏற்படாது என்று தலவரலாறு கூறுகிறது. இங்கே வந்து ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் செய்து கொள்பவர்களுக்கு பூரண ஆயுள் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
இங்கே, சப்த கன்னியரும் கூடி ஈசனிடம் திருமண வரம் கேட்டதாக ஐதீகம். சப்த கன்னியரும் இங்கே வாழை மரங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, இங்கே வாழை மரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். இங்கு காலையும் மாலையும் வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதனால் நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல், பூரண ஆயுள் போன்றவை நிறைவேறும். இங்குள்ள வாழை தனித்த சிறப்பு கொண்டது. இது வேறிடத்தில் நட்டால் வளர்வதில்லை என்கின்றனர். இந்த வாழையின் இலை, காய், கனி என அனைத்தும் சிவனுக்கே உரியவை. மீறி யாராவது அதை சாப்பிட்டால் அவர்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படும் என்று கூறுகின்றனர்.
கல்யாண தீர்த்தம், எம தீர்த்தம், விசாலாட்சி தீர்த்தம், அக்னி தீர்த்தம், தேவ தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் என இங்கே 7 தீர்த்தங்கள் இருக்கின்றன. அதில் அப்பருக்கு பொதி சோறு கொடுத்த இடம் அப்பர் தீர்த்தம் ஆகிவை இருக்கின்றன. ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், இங்குள்ள ஈசனின் மீது சூரியக் கதிர்கள் விழும் வைகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு விசேஷ வழிபாடான கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து செய்து கொள்ளும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை சிறப்பு வாய்ந்தவை. நீண்ட ஆயுளையும் நிறைவான திருமண வாழ்க்கையையும் அருளும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்று கூறுகின்றனர். பைஞ்ஞீலி என்றால் கல்வாழை என்று பொருள். வாழைத் தோப்பாக இருந்த இடத்தில், கல்வாழைகள் நிறைந்த இடத்தில் இந்த எழுப்பப்பட்டதால் இந்த தலத்திற்கு பைஞ்ஞீலி என்றே பெயர் பெற்றது என்று சொல்லப்டுகிறது.