மாணவர்களை ஈர்க்க பாப் அப் வடிவ பாடப் புத்தகங்கள்:
கல்வி,பாடப்புத்தகம்,மதிப்பெண் என்றாலே பெரும்பாலான மாணவர்களுக்கு கசப்புணர்வு ஏற்படும்.மாணவர்களுக்கு கல்வியை எளிய முறையில்
கொண்டு சேர்க்க பலர் புதிய முயற்சிகளை எடுக்கின்றனர். இவ்வாறு பாடப் புத்தக
முறையில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்துள்ளார் திருச்சியை சேர்ந்த
ஆசிரியர் ஒருவர்.
பள்ளிப்பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும்
ஆவலைத்தூண்டுவன அல்ல. அப்படிப்பட்ட பாடங்களையும் ஆசையாய் படிக்கும்
வகையில் எளிதாக விளக்கும் வகையிலும், பொம்மைகளுமாக இருந்தால் மாணவர்களை
நிச்சயமாக ஈர்க்கும் என்பதை நன்கு உணர்ந்து இத்தகைய நவீன பாடப்புத்தகத்தையே
உருவாக்கியுள்ளார் திருச்சி அரசங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஓவிய
ஆசிரியராக பணிபுரியும் அருணபாலன்.
மாற்றுத்திறனாளியான அருணபாலன் ஓவியக்
கலையையும், காகிதங்களையும் இணைத்து முப்பரிமாண முறையில் உருவாக்கியுள்ள
புத்தகங்கள், பாப் அப் ஓரிகாமி (pop up origami) வடிவங்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
ஜப்பானில் நடைமுறையில் உள்ள இந்த வகை பாட
முறையை தமிழக மாணவர்களுக்கு கற்றுத் தரும் பணியில் 3 ஆண்டுகளாக ஈடுபட்டு
வருகிறார் அருணபாலன். விமானம் உருவானதன் வரலாறு, காடுகளில் இருந்து
நகரங்கள் உருவான விதம் உள்ளிட்டவற்றை அனிமேஷன் புத்தகங்களாக உருவாக்கியுள்ள
இவர், தன்னிடம் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கலையை இலவசமாக
கற்றுத் தருகிறார். இது போன்ற புதுமையான விஷயங்களால் கற்றல் என்பது
மாணவர்களுக்கு எளிதான ஒன்றாக மாறும் என்கிறார் அருணபாலன்.
கோடை விடுமுறைக் காலங்களில் திருச்சி
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இந்த
கலையை இலவசமாக கற்றுத் தருகிறார் பாலன்.
இந்த புதிய முயற்சியால் அழிந்து வரும் பாப் அப் ஓரிகாமி ஓவியக் கலைக்கு முப்பரிமாண முறையில் புத்துயிர் கொடுத்துள்ளார் அருணபாலன்.