உள்நோக்கத்துடன் செயல்படும் ஆசிரியர் சங்கம்: பெரியார் பல்கலை துணைவேந்தர் குற்றச்சாட்டு:
ஒரு சில ஆசிரியர் சங்கங்கள், உள்நோக்கத்துடன், பெரியார்
பல்கலை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றன," என, துணைவேந்தர்
முத்துச்செழியன் கூறினார்.பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:"பெரியார்
பல்கலை, துணைப்பதிவாளர் டிஸ்மிஸ் செய்தது, ஆசிரியர் நியமனம், ராஜவேலு
சஸ்பெண்ட் உள்ளிட்ட விஷயங்கள் அவசர கதியில் எடுத்த முடிவு எனவும்,
உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றன.
துணைப்பதிவாளர் சரவணன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விஷயத்தில்,
அரசு வலியுறுத்தியதின் பேரில், 2011 ஏப்ரல், 29ம் தேதி, முன்னாள் நீதிபதி
பொன்னுசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பல மாதங்களாக நடந்த இக்குழுவின்
விசாரணையில், 25க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு,
அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை
உத்தரவின் பேரில், ஆட்சிக்குழுவில், பொருள் நிரலாக வைத்து, அனைத்து
சிண்டிகேட் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்பே, டிஸ்மிஸ் உத்தரவு
வழங்கப்பட்டது. சிண்டிகேட் குழு, உயர்கல்வித்துறையும் எடுத்த நடவடிக்கையான
இதில் எவ்வித உள்நோக்கமோ, விதிமீறலோ கிடையாது.
மதுவுக்கு பில் வைத்த ராஜவேலு, "சஸ்பெண்ட்" செய்யப்பட்டது,
விசாரணைக்குழுவின் பரிந்துரைதான். இதை விசாரிக்க சிண்டிகேட் உறுப்பினர்
கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை
நடைபெற்றுள்ள நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது அவசியம் என்பதால்,
தமிழக அரசு, சிண்டிகேட் ஒப்புதலுடன், மார்ச் 28ம் விளம்பரம்
வெளியிடப்பட்டது.
இதில் தமிழக அரசு பிரதிநிதி, ஆளுனர் பிரதிநிதி, சிண்டிகேட்
குழு பிரதிநிதி உள்ளிட்ட, ஒன்பது பேர் கொண்ட குழு மூலம் நேர்முகத்தேர்வு
நடத்தப்பட்டது. வெளிப்படையாக, தகுதியின் அடிப்படையில், 39 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாக நடந்து வந்த இப்பணியில், எவ்வித
விதிமீறலும் இல்லை.
பல ஆண்டுகளாக பிரைடு மற்றும் தேர்வுத்துறையில் நடந்து வந்த
முறைகேடுகளை தடுக்கும் விதமாக, 40க்கும் மேற்பட்ட தினக்கூலி மற்றும்
தொகுப்பூதிய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில
ஆசிரியர் சங்கங்கள், உள்நோக்கத்துடன், பெரியார் பல்கலை மீது பொய்யான
குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்." இவ்வாறு அவர் கூறினார்.







