டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த
போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில்,
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக
கூறப்படுகிறது.
6 பேர் கைது:
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், கடந்த, 17 மற்றும் 18ம் தேதிகளில் இடைநிலை
ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. 17ம் தேதி,
தர்மபுரியில் வினாத்தாள் கொடுப்பதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட டாஸ்மாக்
ஊழியர் இருவர் உள்ளிட்ட, ஆறு பேரை, தர்மபுரி தனிப்படை போலீசார் கைது
செய்தனர்.வினாத்தாள் நகல் உள்ளிட்ட எந்த பிரதிகளையும், பணம்
பெற்றவர்களிடம், மோசடி கும்பல் கொடுக்காமல், பணம் பெற்றவர்களை குறிப்பிட்ட
இடத்துக்கு வரவழைத்து, குறிப்பிட்ட வினாக்களை, வாய் மூலமாக கூறி,
தேர்வுக்கு தயார்செய்துள்ளது. இதனால், வினாத்தாள், வெளியானதற்கான
ஆதாரங்களை, போலீசார் கைப்பற்ற முடியாத நிலையில், வினாத்தாள் மோசடி என,
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு மாதிரி தாள்கள்:
ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம், நான்கு மாதிரி வினாத் தாள்கள் தயார் செய்யப்பட்டு,
அந்த வினாத்தாள்களில் ஒன்றை தேர்வு நடக்கும் போது, வினியோகம் செய்வதே
வழக்கம். மோசடி கும்பல், நான்கு வினாத்தாளுக்குரிய கேள்விகளையும், பணம்
பெற்றவர்களிடம், வாய் மொழியாகக் கூறி, தேர்வுக்கு தயார் செய்துள்ளது. இந்த
மோசடியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு
இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் பலர் சிக்கலாம்:
மோசடி
கும்பல் கொடுத்த வினாக்களில், 80 முதல், 120 கேள்விகள் வந்திருப்பதாக
கூறப்படுகிறது. கடைசி நேரத்தில், இக்கும்பல் பணம் பெற்று, மொபைல்போன்
மூலம், வினாக்களை, பணம் வாங்கியவர்களிடம் கூறியிருப்பதும், விசாரணையில்
தெரிய வந்துள்ளது. உரிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கில் மேலும்
தொடர்புடைய பலரை, போலீசார் கைது செய்வதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, மோசடி கும்பல், சட்ட ரீதியாக சிக்கக் கூடாது
என்பதிலும், வினாத்தாள், "அவுட்'டானால், மறு தேர்வு நடப்பதை தவிர்க்கும்
வகையில், மோசடியில் ஈடுபட்டிருப்பது, அரசு துறை வட்டாரத்தில், பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.