அங்கன்வாடி பணியாளர்கள் தாங்கள் சமைத்த உணவை உண்டு பார்த்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்: ஆட்சியர்:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் இருவரும்
தாங்கள் சமைத்த உணவை உண்டு பார்த்து உணவில் எந்த விதமான விஷத்தன்மையும்
இல்லை என்பதை உறுதி செய்த பின்புதான் குழுந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று
மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார்.
விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அங்கன்வாடி
உதவியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுக்
கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட
ஆட்சியர் வா.சம்பத் பேசியதாவது:
சமுதாயத்தை மேனமையுறச் செய்யும் புனிதப் பணி ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சித் திட்ட பணி. நம் மையத்தில் நாம் ஆற்றும் பணிகள் எதிர்கால
சந்ததிகளை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற திடமான இலக்கை நோக்கி
ஒவ்வொரு அங்கன்வாடி உதவியாளரும் செயல்பட வேண்டும்.அங்கன்வாடி உதவியாளர்கள்
தினந்தோறும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை மையத்தை விட்டு
செல்லாமல் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட
பிறகே வீட்டுக்குச் செல்ல வேண்டும். சமையல் கூடத்தை தினமும் கழுவி,
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் கூடத்தை சுற்றி
கழிவுநீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கேஸ் அடுப்பு
என்பதால் கேஸ் லீக் ஆகிறாதா என சோதனை செய்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க
வேண்டும். சமையல் செய்யும் இடத்துக்குள் குழந்தைகள் செல்லாமல் இருக்க
தடுப்புகள் வைக்க வேண்டும்.
உணவு பொருள்கள் ஈரம், காற்று ஆகியவற்றால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக
வைத்திருக்க வேண்டும். பருப்பு வகைகளில் பூச்சி, வண்டுகள் பிடிக்காமல்
இருக்க வாரம் தோறும் வெயிலில் உலர்த்த வேண்டும். இணை உணவு மிகவும்
பாதுகாப்பான முறையில் ஈரம்படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வீட்டுக்கு
எடுத்துச் செல்லும் இணை உணவை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டும்.
சமைக்கப்படும் உணவு பொருள்களின் அளவு அரசால் நிர்ணயித்த அளவுக்கு குறையாமல்
எடுத்து சமைக்க வேண்டும்.திறந்த வெளியில் சமைக்கக் கூடாது தினமும்
காலையில் குழந்தைகள் வருகையினை குறித்து வருகைக்கு ஏற்றவாறு உணவு
தயாரித்து, உணவு வழங்கும் நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே உணவு
தயாராக இருக்க வேண்டும்.
உணவு பரிமாறப்படுவசதற்கு முன்னதாக அங்கன்வாடி பணியாளர் மற்றும்
உதவியாளர் இருவரும் உணவினை உண்டு பார்த்து, உணவில் எந்த விதமான
விஷத்தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்த பின்புதாந் குழந்தைகளை வட்டமாக
அமரவைத்துவிட்டு, தட்டு மற்றும் கைகளை கழுவிவிட்டு உணவு அருந்த வைக்க
வேண்டும். மரங்களின் கீழே அமர வைத்து உணவு வழங்கக் கூடாது. அங்கன்வாடிப்
பணியாளர் மற்றும் உதவியாளர் தவிர மற்ற நபர்களால் சமைக்கப்பட்ட உணவினை
பறிமாற அனுமதிக்கக் கூடாது.தினமும் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை மூடியுடன்
உள்ள பீங்கான் பாத்திரத்தில் எடுத்து மூடி வைத்து மறுநாள் காலையில்
அப்புறப்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் முட்டைகளை
குறிப்பிட்ட வெப்பநிலையில் 15 நிமிடம் வேக வைத்து முழு முட்டையாக மதிய
உணவுடன் வழங்க வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
குழந்தைகள் வருகை மற்றும் வீடு சேர்வது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்
எஸ்.பிரபாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம் மற்றும் அனைத்து
வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...