பிளஸ் 1 காலாண்டு தேர்வில் குழப்பம் : ஆங்கில வழி மாணவர்கள் தவிப்பு: தினமலர்
பிளஸ் 1 காலாண்டு பொதுத்தேர்வில், இயற்பியல் வினாத்தாளில், 5,10 மார்க் கேள்விகள் சரியாக அச்சடிக்காமல் விடுபட்டதால், ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகினர்.தமிழக அளவில், பிளஸ் 1 இயற்பியல் (ஆங்கில மீடியம்) காலாண்டு தேர்வு, நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நடந்தது. மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாளில், 4 பக்கங்களில், 3 பக்கங்களில் மட்டுமே கேள்விகள் சரியாக அச்சடிக்கப்பட்டு இருந்தன. 4வது பக்கத்தில் இருக்கவேண்டிய, 5 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் அச்சடிக்காமல் விடுபட்டிருந்தது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு, சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, பள்ளிகளுக்கு போன்
மூலம், தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், பிளஸ் 1 தமிழ் மீடிய மாணவர்களின்
வினாத்தாட்களையே, ஆங்கில வழி மாணவர்களுக்கும் வாசிக்குமாறு,தெரிவித்தனர்.
ஆங்கில வழி மாணவர்கள் 30 நிமிடம், வினாக்களை தனி பேப்பரில் எழுதினர்.
கிராமப்புறங்களில் உள்ள மெட்ரிக்., பள்ளிகள், தாங்களாகவே 5 மற்றும் 10
மதிப்பெண், கேள்விகளை தயார் செய்து கொடுத்துள்ளனர். தேர்வுத்துறையின் இந்த
வினாத்தாள் அச்சடிப்பு குழப்பத்தால், மாணவர்கள் தேர்வு அச்சத்தில்
தவித்தனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வினாத்தாள் அச்சடித்ததில்,
ஏற்பட்ட பிழை குறித்து, தேர்வுத்துறை இயக்குனரிடமிருந்து, பிற்பகல் 2
மணிக்கு தான் தகவல் வந்தது. உடனே, பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்த
தகவல் தெரிவித்தோம். இதற்காக, 30 நிமிடம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
காலாண்டு வினாத்தாட்களை, அந்தந்த மாவட்டத்திலேயே அச்சடித்திருந்தால்,
இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. தமிழக அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்
என்பதால், இந்த பிரச்னை ஏற்பட்டு விட்டது" என்றார்.