பி.எட்., கல்லூரிகள் வருகைப்பதிவு விபரம்: மின்னஞ்சல் அனுப்ப உத்தரவு:
பி.எட்., கல்லூரிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு விபரங்களை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கு, தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது" என அப்பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) உட்பட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாத, 50 க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லூரிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வசதிகளை மேம்படுத்த, அவகாசமும் அளிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாத, மூன்று பி.எட்., கல்லூரிகளின்
உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், இன்று
முதல் (செப்.,11) வகுப்புகள் துவங்குகின்றன. இதில், 180 ஆக இருந்த
வேலைநாட்கள், 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை
மற்றும் "ஆப்சென்ட்" விவரங்களை, தினமும் காலை 11 மணிக்குள், தமிழ்நாடு
ஆசிரியர் கல்வி பல்கலைக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
கல்லூரிகளில் வருகைப் பதிவு குறித்து ஆய்வு செய்யும்போது, குளறுபடிகள்
இருந்தால், கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்படும்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், புகார்
அளிக்கலாம். விசாரணையில் உண்மை என தெரிந்தால், கல்லூரியின் உரிமம் ரத்து
செய்யப்படும், என்றார்.







