பள்ளி மாணவருக்கு பேச்சு, கட்டுரை போட்டி:
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, வரும், 13ம்தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா வரும், 14ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களக்கான பேச்சுப் போட்டி, 13ம் தேதி, காலை, 11 மணிக்கு கரூர் செங்குந்தபுரம், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் கூட்டுறவே நாட்டுயர்வு, கூட்டுறவு சங்கங்களால் சமுதாய நன்மை ஆகிய தலைப்புகளிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாறிவரும் சூழலில் சமுதாய மாற்றம் தரும் கூட்டுறவு, துயரம் நீக்க கூட்டுறவை நாடுவோம், சிகரத்தை தொடுவோம் போன்ற தலைப்புகளில், 9, 10ம் வகுப்புக்கு பேச்சுப் போட்டி நடக்கிறது.
எளியோர் வாழ்வில் எந்நாளும் ஏற்றம் தருவதே கூட்டுறவு, உழைப்பவர் கூடினோம், தொழில்நலம் நாடினோம், ஏழ்மை அகற்றி செழுமை தரும் உறவுப்பாலம் கூட்டுறவு ஆகிய தலைப்புகளில் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு போட்டி நடக்கும்.
இதில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து பேசலாம். கட்டுரைப் போட்டிகள் முதல் பிரிவுக்கு எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற்றிட, எங்கும் கூட்டுறவு, சேமிப்பும் சேவையும் சேர்ந்ததே கூட்டுறவு, இரண்டாம் பிரிவுக்கு கூடிதொழில் செய்வோம், பொருளாதார மாற்றத்திற்கு கூட்டுறவு ஒரு மருந்து, மூன்றாம் பிரிவினருக்கு பிறர்நலம் பேணிட கூடி உழைப்பதே கூட்டுறவு, தொழில்கூடி செய்தே வாழ வழிவகுத்தோம், வணிக சுரண்டலை மாற்ற ஊதுக கூட்டுறவு சங்கு ஆகிய தலைப்புகளில், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.கட்டுரை போட்டிகளை பள்ளி அளவில் நடத்தி, கட்டுரை தாள்களை, கரூர் தெரசா நகரில் உள்ள கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வெற்றிபெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படும்.