தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் எளிதாக விண்ணப்பிக்க ஏற்பாடு:
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் எளிதாக விண்ணப்பிக்க தேர்வு துறை ஏற்பாடு செய்துள்ளது.மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள மேல்நிலை, இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து இம் மாதம் 15 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு தேர்வின் போது தனிதேர்வு மாணவர்கள் தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
அதன்பிறகு பணம் கட்டுதல் உள்ளிட்ட 3 பணிகள் வெவ்வேறு இடங்களில் நடத்தினர். இதனால், தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்குவதிலும், மார்க் ஷீட் வழங்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிரமங்களை தவிர்த்திடும் வகையில் பிழைகள் ஏற்படாமல் விண்ணப்பங்களை பதிவு செய்திட வேண்டியும், ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பு மையங்கள் (நோடல் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளன.
இதில் பிழைகள் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்திட தேர்வுதுறையால் பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த மையத்தில் கம்ப்யூட்டரில் ஆன்-லைனில் பதிவு செய்யும் போது போட்டோ எடுப்பதால் தனியாக போட்டோ எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இம்மையத்திலே விண்ணப்பங்களை சமர்பித்து தேர்வு கட்டணத்தையும் செலுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது. அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தவாறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம், என முதன்மை கல்வி அலுவலர் வாசு தெரிவித்தார்.