திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைவதில் தாமதம்:
திண்டுக்கல் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க கடந்த தி.மு.க., ஆட்சியில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவக் கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து மருத்துவக்கல்லூரி திட்டம் தூசிதட்டப்பட்டது மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகம் இதற்கான இடம் தேடும் படலத்தை தொடர்ந்தது.
அரசு மருத்துவமனை 10 ஏக்கரில் அமைய வேண்டும், அதே நேரத்தில் மருத்துவக்கல்லூரிக்கு 20 ஏக்கர் இடம் வேண்டும், என்ற அடிப்படையில் இடம் தேர்வு நடந்தது. நகருக்கு அருகே அனைத்து அரசு மற்றும் புறம்போக்கு இடங்கள் பட்டா போட்டு தரப்பட்டுள்ளதால், 20 ஏக்கர் மொத்தமாக மருத்துவக்கல்லூரிக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகராட்சிக்கு சொந்தமான இடம் 90 ஏக்கர் ஒடுக்கம் கிராமத்தில் உள்ளது. இந்த இடத்தை மருத்துவக்கல்லூரி அமைக்க எழுதித்தரும்படி நகராட்சி நிர்வாக ஆணையத்திற்கு வருவாய்த்துறையின் கடிதம் எழுதினர். இதுவரை இதற்கு பதில் இல்லாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன் கூறியதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவமனை 12 ஏக்கரில் உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு இதுவே போதுமானது. மருத்துவக் கல்லூரிக்கு தனியாக ஒரே இடத்தில் 20 ஏக்கர் இடம் கிடைக்கவில்லை. ஒடுக்கம் இடத்தை கேட்டு பல கடிதங்கள் சென்றும் நடவடிக்கையில்லை, என்றார்.