405 வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடம்
திடீரென கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவேண்டும்
என்பதை அடிப்படையாக வைத்து கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி
இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துதல், மாற்று திறனாளி மாணவமாணவியருக்கு பாட கருவிகள் வழங்குதல்
போன்ற பணிகள் நடந்தன.இதற்காக ஒவ்வொரு
வட்டாரத்துக்கும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் என்ற பணியிடம் புதிதாக
உருவாக்கப்பட்டு. இதில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கட்டுபாட்டில்
பள்ளிகளை பார்வையிட ஆசிரியர் பயிற்றுனர்களும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள
பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு
சம்பளம் மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து அளிக்கப்பட்டது.
இந்த பணிக்கு நிதி ஒதுக்குவதை கடந்த ஆண்டே
மத்திய அரசு நிறுத்திவிட்டது. நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையால் வட்டாரவள மைய
மேற்பார்வையா ளருக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் அதிரடியாக நேற்றுமுன் தினம் பள்ளிகல்வித்துறை இயக்குனர்
ராமேஸ்வரமுருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்களை கலைத்து அங்கு
பணிபுரிபவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டார். இது குறித்து
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், Ôஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்
வட்டார வள மையங்களில் தமிழகம் முழுவதும் 405 மேற்பார்வையாளர்கள்
நியமிக்கப்பட்டனர். அந்த பணியிடங்கள் தற்போது கலைக்கப்பட்டுவிட்டதால்
அவர்கள் மீண்டும் பள்ளி பணிக்கே திரும்புகின்றனர். சொந்த மாவட்டங்களில்
பணியிடம் கிடைக்காமல் வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை பல தலைமை
ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது,Õ என்றனர்.