ஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசிரியை மனு:
பணியிட மாறுதல் கோரி, ஆசிரியை ஒருவர்,
ஆம்புலன்சில் வந்து, மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி கலெக்டரிடம்
மனு கொடுத்தார். திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர், சகாயமேரி, 44.
இவர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே, அண்டனு"ாரில்,
ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம், 21ம் தேதி,
ஆசிரியை ஒருவருடன், டூவீலரில், பள்ளிக்குச் சென்றபோது, காட்டுநாவல் காலனி
அருகே, மற்றொரு டூவீலர் மோதியதில், இருவரும் காயமடைந்தனர். இதில்,
சகாயமேரிக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்குள்ள, அரசு
மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருச்சியில், தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றார். பூரண குணமடையாததால் விடுப்பில் உள்ளார். இந்நிலையில்,
தனக்கு கருமண்டபம் பகுதியில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் கோரி, திருச்சி
கலெக்டர் ஜெயஸ்ரீயை சந்தித்து மனு அளிக்க, சகாயமேரி, ஆம்புலன்ஸ் மூலம்,
நேற்று காலை, கலெக்டர் அலுவலகம் வந்தார். மக்கள் குறைதீர் கூட்டத்தில், பணி
மாறுதல் கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
இது குறித்து சகாயமேரி கூறுகையில், ""என்
கணவர், பணி நிமித்தமாக, திருநெல்வேலியில் உள்ளார். பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, இதுவரை மாவட்ட, ஒன்றிய அளவிலான, கலந்தாய்வு நடக்கவில்லை.
வயதான பெற்றோர், என் பராமரிப்பில் உள்ளனர். காலில் எலும்பு முறிவு
ஏற்பட்டுள்ளதால், வெகு தூரம் பயணம் செய்யக்கூடாது என, டாக்டர்கள்
கூறியுள்ளனர். எனவே, கருணை அடிப்படையில், கருமண்டபம் பகுதியில் உள்ள,
ஏதேனும், ஒரு பள்ளிக்கு இடமாறுதல் வழங்கக் கோரி மனு அளிக்க வந்தேன்,''
என்றார்.







