ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை
உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திராவிடர்
கழகம் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உடனடியாக
ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு
வழங்கி உரிய நடவடிக்கையை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
அறிவுறுத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமிழக அரசு இனியும் பிடிவாதம் காட்டாமல்,
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கனவே
தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின்
நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்தில் இட
ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது என
மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், எனவே தமிழக அரசு தனது
தவறான அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இட
ஒதுக்கீட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.







