சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்புல
ஆம்டெக் மாநாட்டு அரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை தொழில்நுட்ப
படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு (TANCET- 2014) விண்ணப்பம் பதிவு
செய்யப்பட்டு, ஆன்-லைன் சர்வர் மூலம் உடனடியாக நுழைவுத்தேர்விற்கான அனுமதி
சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான (எம்இ.,
எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.சி.ஏ, எம்.பி.ஏ) பொது நுழைவுத்தேர்வு வருகிற
மார்ச்.22,23 தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்விற்கான விண்ணப்பத்தை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மையம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள
15 மையங்களில் மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,
பணத்தை செலுத்தி, அங்கேயே புகைப்படம் எடுக்கப்பட்டு, ஆன்-லைன் சரவர் மூலம்
உடனடியாக நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த
விண்ணப்ப பதிவு தேதி பிப்.22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை
மையத்தில் மட்டும் பிப்.24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு தமிழகத்தில் இதுவரை 47,300 மாணவ, மாணவியர்கள்
விண்ணப்பித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மையத்தில் மட்டும்
செவ்வாய்க்கிழமை வரை சுமார் 1500 மாணவ, மாணவியர்கள் விண்ணப்ப பதிவு செய்து
அனுமதி சீட்டு பெற்றுச் சென்றுள்ளனர். விபரங்களுக்கு சென்னை மையத்தை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-22358314, அண்ணாமலைப் பல்கலைக்கழக
மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 04144- 237275.








