திருப்பூரில் நடந்த தினமலர் வழிகாட்டி
நிகழ்ச்சி நேற்றுடன் நிறை வடைந்தது. கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்க,
ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து
புத்துணர்ச்சியுடன் சென்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு
ஆலோசனை வழங்கும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் வித்யா
கார்த்திக் மண்டபத்தில், கடந்த இரு நாட்களாக நடந்தது. டாக்டர் எம்.ஜி.ஆர்.,
பல்கலை, நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், டாக்டர் என்.ஜி.பி., எஜூகேஷனல்
இன்ஸ்டிடியூஷன், ஜான்சன் இன்ஸ்டிடியூஷன், ஸ்காட், ஆர்.வி.எஸ்., குரூப்,
பி.ஏ., பொறியியல் கல்லூரி இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.
நேற்று, கல்வியாளர்கள் ஜெயபிரகாஷ்காந்தி,
நடிகர் அஜய் ரத்தினம், திருநாவுக்கரசு, ஆடிட்டர் சரவண பிரசாத், கணேஷ்
மகாதேவன், நம்பியார், வணங்காமுடி ஆகியோர் பேசினர். அனிமேஷன் மற்றும்
கிராபிக் டிசைனிங் படிப்பு குறித்து, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி
கல்லூரி உதவி பேராசிரியர் திருநாவுக்கரசு பேசியதாவது:
அன்றாட வாழ்வில், அனிமேஷன் துறை பங்களிப்பு
மிகவும் அவசியமாகி விட்டது. புதிய வீடு கட்டும்போது, அதற்கான வரைபடங்களை,
கிராபிக் டிசைனிங் வல்லுனர்களே, இன்ஜினியர் களுக்கு தெளிவாக வடிவமைத்துக்
கொடுக்கின்றனர். மருத்துவத்துறையிலும், டிசைனிங் மிக முக்கிய பங்கு
வகிக்கிறது. இத்துறையை தேர்ந்தெடுக்க, கற்பனைத்திறன் மட்டும் இருந்தால்
போதும். இயல்பாகவே ஒவ்வொருவருக்குள்ளும் கற்பனைத்திறன் மறைந்திருக்கிறது.
திருப்பூரில், ஆடை வடிவமைப்புக்கு ஏராளமான
டிசைனர்கள் தேவைப்படுகின்றனர். போட்டோஷாப், இல்லுஸ்ட்ரேட்டர் போன்ற 2டி
சாப்ட்வேர்கள் படித்தாலே, வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. டாக்டர்,
இன்ஜினியர் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே, சமூகத்தில் மரியாதை
என நினைக்கின்றனர். கிராபிக் டிசைனிங் துறையை பொறுத்தவரை, நல்ல
சம்பளத்தோடு கூடிய புகழையும் கொடுக்கும். இப்படிப்புகளை, டிப்ளமோ போன்ற
குறுகிய கால படிப்புகளாக படிக்கக்கூடாது.
சிறந்த கல்லூரியை தேர்வுசெய்து படித்தால்,
எளிதில் வேலைவாய்ப்பு பெற முடியும். இன்றைய சினிமாவில், கிராபிக் டிசைனிங்
மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனிமேஷன் துறையை படித்து விட்டால் மட்டும்
உடனே வேலை கிடைத்து விடும் என்று நினைக்கக் கூடாது. உங்களது கற்பனை திறன்,
படைப்பாற்றலுக்கு ஏற்ப, உயர்ந்த நிலையை அடைய முடியும்.இவ்வாறு, அவர்
பேசினார்.
தகவல் தொழில்நுட்ப துறையின் தற்போதைய போக்கு என்ற தலைப்பில், "டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்" ஆலோசகர் கணேஷ் மகாதேவன் பேசியதாவது:
கற்பனை திறனுக்கு வடிவம் தர வேண்டும். அதற்கு
முயற்சி அவசியம். ஐ.டி., துறை, கடந்த 20 ஆண்டுகளில், மக்கள் மத்தியில் அதிக
பிரபலமானது. அதிகளவில் ஊழியர் பணியாற்றும் துறையாக உள்ளது. தற்போது 31
லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு மூன்று லட்சம் முதல் நான்கு
லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறது. கடந்த மார்ச் 31 வரை, ஐ.டி.,
துறையில் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
வரும் 2020ல், 18 லட்சம் கோடியாக அதிகரிக்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், 600 கோடி ரூபாயாக
இருந்த வர்த்தகம், இன்று ஆறு லட்சம் கோடியாக இருக்கும்போது, 18 லட்சம் கோடி
ரூபாய் இலக்கை எட்டுவது சாத்தியம். ஏற்றம், இறக்கம் இல்லாத துறை எதுவும்
இல்லை.எல்லா துறையிலும், "சாப்ட்வேர்&' வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன், வங்கி, தபால் துறை, பஸ் போக்குவரத்து, விமான பயணம் உட்பட
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், சாப்ட்வேர் தொழில்நுட்பம் மிகப்பெரிய
வளர்ச்சி அடைந்துள்ளது. மொபைல் போனிலேயே சகல வசதிகளையும், மக்கள் பெற்றுக்
கொண்டிருக்கின்றனர்.
எந்த பாடப்பிரிவு படித்திருந்தாலும், ஐ.டி.,
துறை வேலைவாய்ப்பு அளிக்கிறது. இத்துறையில் பணியாற்ற ஆங்கிலத்தில் தேர்ச்சி
அவசியம். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், பிறர் பேசுவதை தெளிவாக
புரிந்து கொள்வதும் முக்கியம். ஆங்கிலம் தெரியாவிட்டால், ஐ.டி., துறையில்
தாக்குப்பிடிப்பது கஷ்டம். உலகம் சார்ந்த பொது அறிவும் முக்கியம்.
வாழ்க்கைக்கு எது தேவையாக இருக்கிறதோ, அதை கற்றுக்கொள்வதற்கு நேரத்தை
ஒதுக்க வேண்டும்.பெரும்பாலானவர்களிடம், தங்களது எதிர்காலம் குறித்த
திட்டமிடல் இல்லை; வாழ்க்கை பற்றிய தெளிவு இல்லை. எந்த செயலிலும்
திட்டமிடல் இல்லையென்றால், தோல்வியில் முடியும். முயற்சியும், ஈடுபாடும்
இருந்தால் மட்டுமே, வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.இவ்வாறு, கணேஷ் மகாதேவன்
பேசினார்.