பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும்,
மறுகூட்டல் செய்யவும் தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் மாணவ, மாணவிகள்
விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிகள் கடந்த 9ம் தேதி
வெளியிடப்பட்டது. இதையடுத்து தனித் தேர்வர்களுக்கு அதே நாளில் அந்தந்த
தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன.
பள்ளிகள் மூலம்
தேர்வு எழுதியோருக்கு 21ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், பொறியியல், மருத்துவம்
உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணிகள்
தொடங்கியுள்ளன. பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஏதாவது சந்தேகம்
இருந்தால் அது குறித்து தெரிந்து கொள்ள வசதியாக விடைத்தாள் நகல் பெறவும்,
மறுகூட்டல் செய்யவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண்
மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த
பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள்
மூலமாகவும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டது. அதன்படி விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள்
மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் தேர்வுத் துறை
அறிவித்து இருந்தது.இதையடுத்து 9ம் தேதி முதல் மாணவர்கள் விடைத்தாள் நகல்
கேட்டும், மறுகூட்டல் செய்ய வேண்டியும் விண்ணப்பித்து வந்தனர். நேற்று
இறுதி நாள். விடைத்தாள் நகல் கேட்டு 79 ஆயிரத்து 953 பேரும், மறுகூட்டல்
செய்ய கேட்டு 3,346 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.