வழக்கம்போல் கலை அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்காக இந்த ஆண்டும் மாணவர் கூட்டம் அலைமோதி வருகிறது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனம் கலை, அறிவியல் கல்லூரிகள்
பக்கமும் திரும்பியிருப்பது, மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடலாம்,
அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்டணம் கிடையாது என்பன
உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக தொழில் படிப்புகளைக் காட்டிலும்,
கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ளன.
பல கல்லூரிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு விண்ணப்ப விநியோகம் கூடுதலாகியிருப்பதாக அந்த கல்லூரிகளின் முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் முதல்
நாளில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இது குறித்து அக்
கல்லூரி முதல்வர் வி.காந்திமதி கூறியது:
விண்ணப்பகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக விநியோகமாகி வருகிறது.
மாணவர்களின் வசதிக்காக தேவைப்படும்போது கல்லூரி வளாகத்தில் கூடுதல் மையங்கள் அமைத்து விண்ணப்பங்களை விநியோகித்து வருகிறோம் என்றார்.
இதுபோல் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியில் முதல் மூன்று
நாள்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளது. இது
கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் என அக் கல்லூரி முதல்வர் கே.ஆர். சீதா
லட்சுமி கூறினார்.
எத்திராஜ் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளில் 7
ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளதாக கல்லூரி முதல்வர் ஜோதி குமாரவேல்
தெரிவித்தார்.
கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும் விண்ணப்பக் கட்டணம்
அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை தங்கள்
இஷ்டத்துக்கு நிர்ணயித்து வசூலிப்பதால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக
ஏழை மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பிற
படிப்புகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பதால், கலை அறிவியல் படிப்புகளில்
சேர விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில்
விண்ணப்பங்களைப் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையில் சில
கல்லூரிகளில் விண்ணப்பம் ரூ. 100-க்கும், மற்றொரு கல்லூரியில் ரூ.
200-க்கும், வேறு சில கல்லூரிகளில் அதற்கு மேல் கூடுதல் விலைக்கும்
விற்கப்படுகின்றன.
இதனால், எங்களைப் போன்ற ஏழை மாணவர்கள் விண்ணப்பங்களை பெற முடியாத நிலை
ஏற்படுகின்றது. எனவே, விண்ணப்பக் கட்டணத்தை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்றுச்
சென்ற மாணவிகள் தெரிவித்தனர்.
அரசாணை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணம்
ரூ. 25 என்ற அளவிலும், பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டுமே வசூலிக்கப்பட
வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
இதனடிப்படையிலேயே அனைத்து அரசு கல்லூரிகளிலும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூயில்
விண்ணப்பங்கள் ரூ. 30-க்கு விநியோகிகப்படுகின்றன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு
மாணவிகளுக்கு பதிவுக் கட்டணமான ரூ. 2 மட்டும் பெற்றுக்கொண்டு விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படுகின்றன. இதேபோல்தான் அனைத்து அரசு கலை அறிவியல்
கல்லூரிகளிலும் வசூலிக்கப்படுகின்றன.
ஆனால், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பிரபல கல்லூரி
ஒன்றில் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 வசூலிக்கப்படுகிறது. மற்றொரு
கல்லூரியில் விண்ணப்பங்கள் ரூ. 100-க்கு விநியோகிக்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகி பிரதாபன் கூறியது:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோல், அரசு உதவி பெறும்
கல்லூரிகளிலும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 என்ற அளவில்தான்
வசூலிக்கவேண்டும்.
ஆனால், இந்தக் கல்லூரிகள் அங்கு வழங்கப்படும் சுயநிதி படிப்புகளைக்
காரணம் காட்டி மறைமுகமாக அனைத்து படிப்புகளுக்குமான விண்ணப்பத்தையும்
கூடுதல் விலைக்கு விற்று வருகின்றன.
ஏழை மாணவர்கள் பாதிக்கப்பாடத வகையில் இதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
"கல்லூரிகள் மீது நடவடிக்கை உறுதி'
கடந்த கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக மாணவர்களைச்
சேர்த்த கல்லூரிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை
பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழக
துணைவேந்தர் தாண்டவன் கூறியது:
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட கலை அறிவியல்
கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரிகளிடமிருந்து இதுவரை,
படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடத்தை அதிகரித்துக் கொள்வதற்கான கோரிக்கை
வரவில்லை. வழக்கமான மாணவர் சேர்க்கை தொடங்கிய பிறகே, கல்லூரிகள் இந்த
கோரிக்கையை அனுப்பத் தொடங்குவர். மேலும், கடந்த 2013-14 கல்வியாண்டில்
சென்னையில் உள்ள சில கல்லூரிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட சில
படிப்புகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளன. அந்தக்
கல்லூரிகளுக்கு 2014-15 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
வழங்கப்படாது என்றார்.








