தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள
2,023 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்த மருத்துவக்
கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள சிறப்புப்
பிரிவினருக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்துப்
பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்ளிட்ட பொதுப்
பிரிவினருக்கு முதல் கட்ட கலந்தாய்வு வரும் புதன்கிழமை (ஜூன் 18)
தொடங்குகிறது.
எத்தனை இடங்களுக்கு கலந்தாய்வு? எம்.பி.பி.எஸ்.
படிப்பில் சேர இந்த ஆண்டு மொத்தம் 27,539 பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்த
ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களிடையே இந்த
ஆண்டு கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று
கட்டங்களாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 19 அரசு
மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ்.
இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய
மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) ஒப்புதல் அளித்துள்ள 2,023
எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி
தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு
தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ்.
இடங்கள், திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்
கல்லூரியின் 50 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சேலம் அரசு மருத்துவக்
கல்லூரியின் கூடுதல் 25 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு இந்திய
மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ) ஒப்புதல் அளிப்பதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த ஆண்டு மொத்தம் இருந்த 2,555 எம்.பி.பி.எஸ். இடங்களின்
எண்ணிக்கையில் 175 இடங்கள் போக 2,380-ஆகக் குறைந்துள்ளது; இதில் அகில
இந்திய ஒதுக்கீட்டுக்கு 357 இடங்கள் (15 சதவீதம்) போக, தமிழக
ஒதுக்கீட்டுக்கு 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே இருக்கும்.
கவலை வேண்டாம்-அதிகாரிகள் நம்பிக்கை: கடந்த ஆண்டு
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியபோது 1,823 அரசு
எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால்,
தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத் துறை எடுத்த முயற்சிகள் காரணமாக 2,555
அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தது, தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172
இடங்களுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்தது. அதே போன்று மேலே குறிப்பிட்ட
திருவாரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளின்
எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி
விரைவில் நிச்சயம் கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள்
நம்பிக்கை தெரிவித்தனர்.
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: சுயநிதி மருத்துவக்
கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும்
சேர்த்து முதல் கட்ட கலந்தாய்வு (ஜூன் 18) நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு
ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன.
இந்த ஆண்டு இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு புதுப்பித்தல் அனுமதியை இந்திய மருத்துவக்
கவுன்சில் (எம்.சி.ஐ.) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து எத்தனை அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல்
கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்பது செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 17)
தெரிந்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.








