இளநிலை, முதுகலையில்
வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக
நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை லதா தாக்கல் செய்த மனு: இளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை
(எம்.ஏ.,- ஆங்கில இலக்கியம்), பி.எட்.,(ஆங்கிலம்) படித்துள்ளேன். தொழில்
மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.
முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர்கள் நேரடி
நியமனத்திற்கு, என் பெயரை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (டி.ஆர்.பி.,)
வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. டி.ஆர்.பி., சார்பில் 2012 ஜன.,7 ல்
நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். பணி நியமனத்திற்கான தற்காலிக
தேர்வுப் பட்டியல் 2012 ஏப்.,4 ல் வெளியானது. என் பெயர் இடம் பெறவில்லை.
பட்டியலில் பெயரை சேர்த்து, ஆசிரியர் பணி வழங்க பள்ளிக் கல்வி
இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி
எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார்
ஆஜரானார். நீதிபதி: தமிழ்நாடு மேல்நிலை பள்ளி சிறப்பு விதிகள்படி மனுதாரர்
இளநிலை, முதுகலை மற்றும் பி.எட்., ஆகியவற்றில் ஆங்கிலம் படித்திருக்க
வேண்டும். ஆனால், மனுதாரர் இளநிலை வேதியியல் படித்துள்ளார். இளநிலை,
முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்திருந்தாலும், 1:1 என்ற விகிதத்தில்
முன்னுரிமை வழங்கலாம் என மனுதாரர் கோருகிறார். இது, ஏற்கனவே தேர்வாகி
இடமாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு பொருந்தும். புதிதாக தேர்வு
செய்யப்படுவோருக்கு, இவ்விதி பொருந்தாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,
என்றார்.