அ.தி.மு.க., பொதுச்
செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை தேதி, தள்ளி போனதால், பள்ளி
திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அ.தி.மு.க., பொது
செயலாளர் ஜெயலலிதா, ஜாமின் மனு மீதான விசாரணை, 1ம் தேதியான நேற்று
முன்தினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரிக்க மறுத்து, 7ம் தேதிக்கு
தள்ளி வைத்து நீதிபதி ஒத்தி வைத்தார். தமிழகத்தில், பள்ளிகளுக்கு காலாண்டு
தேர்வு விடுமுறை, செப்., 27ம் தேதி துவங்கி, அக்.,5ம் தேதி வரை
விடப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி, பள்ளி வழக்கம் போல் திறந்து செயல்படும்,
என, அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலால், காலாண்டு தேர்வில்
ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கு, 7, 8ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று,
பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு
நீதிமன்ற தீர்ப்பால், ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனு,
7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவருக்கு,அன்று ஜாமின் கிடைக்குமா என்ற
விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், பள்ளி, 6ம் தேதி திறக்கப்படுமா,
விடுபட்ட தேர்வு, 6 முதல் நடக்குமா, 7ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமின் மனு
விசாரணையில் குளறுபடி ஏற்பட்டால், தொடர்ந்து பள்ளி நடக்குமா? என்ற கேள்வி
எழுந்துள்ளது. 6ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் பள்ளிக்கு விடுமுறை
வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா சிறையில்
அடைக்கப்பட்டது முதல், தமிழகத்தில் கடையடைப்பு, வேலை நிறுத்தம்,
உண்ணாவிரதம், பிற மாநில பஸ்கள் நிறுத்தம், உருவ பொம்மை எரிப்பு என, அசாதாரண
சூழல் நிலவு கிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பு குறித்து
முறையான அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டுமென, பெற்றோர்
எதிர்பார்க்கின்றனர். கல்வி துறை அதிகாரிகள் கூறும் போது, 'காலாண்டு தேர்வு
விடுமுறைக்கு பின், 6ம் தேதி, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைப்பது குறித்து, எவ்வித தகவலும்
கிடைக்கவில்லை. பள்ளி கல்வி துறை தான், இதை முடிவு செய்து, அறிவிக்கும்'
என்றனர்.