எஸ்.எஸ்.எல்.சி தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. தேர்வு 11 ஆயிரத்து 827 பள்ளிகளில் இருந்து 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 50 ஆயிரத்து 429 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வு மொத்தத்தில் 3 ஆயிரத்து 298 மையங்களில் நடைபெற்றது.
தமிழ் முதல் தாள்
நேற்று தமிழ் முதல் தாளுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. தேர்வு என்பதால் காலையிலேயே மாணவ-மாணவிகள் குளித்துவிட்டு, இஷ்டமான தெய்வத்தை வழிபட்டுவிட்டு பெற்றோர்களிடம் வாழ்த்து பெற்று, பின்னர் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றுவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். பெரும்பாலான பள்ளிகளில் கடவுள் வழிபாடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அவர்கள் நன்றாக தேர்வு எழுத வேண்டிக் கொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர்.
அமைச்சர் கே.சி.வீரமணி
தேர்வு எப்படி எழுதுகிறார்கள் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஆகியோர் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அவர்களுடன் அரசுத்தேர்வுத்துறை இணை இயக்குனர் உமா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.அனிதா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
பறக்கும்படை
தமிழ்நாடு முழுவதிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்விற்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும்படை உருவாக்கப்பட்டு தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியில் ஈடுபடும் பணி மூத்த முதுகலை ஆசிரியர்கள், பள்ளி உதவி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை தீவிரமாகக் கண்காணித்தனர். பள்ளிக் கல்வித் துறையின் அரசாணையின்படி பள்ளிக்கல்வி துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், ச.கண்ணப்பன், வி.சி.ராமேஸ்வரமுருகன், பிச்சை ஆகியோரும், தர்ம.ராஜேந்திரன், பழனிச்சாமி, கார்மேகம், கருப்பசாமி, உமா, உஷாராணி, நரேஷ், பாலமுருகன் உள்பட அனைத்து இணை இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குநர்களும் தேர்வு முடியும் நாள் வரை, தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், கண்காணிப்புப் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏப்ரல் 10-ந்தேதி தேர்வு முடிவடைகிறது.








