பிளஸ்-2 தேர்வு
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.தேனி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
காப்பி அடித்த மாணவர்கள் சிக்கினர்.
தேனி அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் இணை இயக்குனர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டபோது, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காப்பி அடித்ததாக 3 மாணவர்கள் சிக்கினர். கணக்குப்பதவியியல் பாடத்தில் காப்பி அடித்ததாக தனித்தேர்வு எழுதிய மாணவர் ஒருவரும், வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 2 மாணவர்களும் சிக்கினர்.
3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்
இதையடுத்து அந்த தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் வடிவேல், முதுகலை ஆசிரியர் லட்சுமிநாராயணன், வைகை அணைப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம் ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.








