பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு
வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள்
தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்-2 அரசுப்
பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. சிஇஓ நாகராசு,
கூடுதல் சிஇஓ கணேசன், டிஇஓ (பொ) பாலு, மாவட்டதொடக்க கல்வி அதிகாரி எலிசபெத்
முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியது:
பிளஸ் 2 தேர்வில் நடப்பாண்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தேர்வு முடிவுகள் வெளியான 2
நாளில் மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் தற்காலிக மதிப் பெண் சான்றிதழ்களை
டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் நடப்பாண்டு முதல் தேர்வு மையத்தில்
மாணவர்கள் ‘ஏ-பி‘ முறையில் அடுத்தடுத்து உட்கார வைக்கப்படுவார்கள்.இதன்படி
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 6
பாடங்களுக்கான வினாத்தாள்களில் ஏ மற்றும் பி வரிசை
குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றில் பகுதி-1ல் ஒரு மதிப்பெண் வினாக்கள்
வெவ்வேறு வரிசையில், வினா எண்களின் வரிசை மாறுபட்டிருக்கும் வகை யில்
அச்சிடப்பட்டிருக்கும். இதன்படி முன்பின் அமர்ந்துள்ள
மாணவர்களுக்கும் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள மாணவர்களுக்கும் ஒரே
வரிசைகொண்ட வினாத்தாள் வழங்குவதை தவிர்க்கும் பொருட்டு முன், பின்னாக
ஒவ்வொரு வரிசையிலும் 5 மாணவர்கள் என அறைக்கு 20பேர் அமருகிற வகையில்
இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில்
ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளதால், தேர்வு மையங்களில்
பணிபுரிவோர் எந்த ஒழுங்கீன செயல்களுக்கும் துணை போகாமல் இருக்கவேண்டும்.
பறக்கும் படையினர் துரிதமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு, தேர்வுக்கு
இடையூறின்றி பணியாற்றவேண்டும். இவ்வாறு லதா பேசினார். இந்த கூட்டத்தில்
தேர்வு மையங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,
சிறப்பு பறக்கும் படையினர், ரூட் அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர்
ஆகியோர் கலந்துகொண்டனர்.