பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் 99 சிறைவாசிகளுக்காக மதுரை மத்திய சிறை வளாகத்தில் முதல்முறையாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு
வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது. மதுரை மத்திய சிறையில்
தேர்வெழுதும் சிறைவாசிகள் இதுவரை திருச்சிக்கும், சென்னைக்கும்
சென்றுவந்தனர்.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து
தேர்வெழுதச் செல்லும் கைதிகளை அழைத்துச் செல்வதில் சில நடைமுறைச்
சிக்கல்கள் இருந்தன. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்க
அனுமதி கோரப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது மதுரை மத்திய சிறையில்
முதன்முறையாக பத்தாம் வகுப்புத் தேர்வெழுதும் சிறைவாசிகளுக்கு 2 பெரிய
அறையில் 5 தடுப்புகள் அமைக்கப்பட்டு தலா 20 பேர் வீதம் தேர்வெழுத
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய சிறை வளாகத் தேர்வு மையத்தில் மதுரை சிறைவாசிகள்
30, திருச்சி 26, பாளையங்கோட்டை 33, புதுக்கோட்டை 10 என மொத்தம் 99 பேர்
பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
மதுரை சிறை வளாக மையத்தில் தேர்வெழுதும் திருச்சி
உள்ளிட்ட சிறைவாசிகள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தனர். அவர்கள்
தேர்வுக்கு படிக்க மின்சார வசதி உள்ளிட்டவற்றை சிறை கண்காணிப்பாளர்
அறிவுடைநம்பி செய்துள்ளார்.
தேர்வு விடைத்தாள்கள் புதன்கிழமை மாலை சிறைவளாகத்துக்கு
கொண்டு வரப்பட்டு பீரோக்களில் வைத்து சீல் வைக்கப்பட்டன. சிறை வளாகத்
தேர்வு மையத்துக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தை மதுரை
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
கடந்த ஆண்டு மதுரை சிறைவாசிகள் 11 பேர் பத்தாம்
வகுப்புத் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் 2 சிறைவாசிகள் பிளஸ் 2 தேர்வை, சென்னை
புழல் சிறையில் எழுதி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








