162 சிவில் நீதிபதிகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு(2014) ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.
மதிப்பெண் பட்டியல்
அதில் இருந்து 590 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்தப்பட்டது.
அதில் 314 பேர் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணல் தேர்வுக்கு 60 மதிப்பெண் ஆகும். நேர்காணல் தேர்வு கடந்த (ஏப்ரல்) 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த 2 தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 மற்றும் 2-ந்தேதிகளில் நடைபெற்ற தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், நேர்காணல் தேர்வில் எடுத்த மதிப்பெண்களையும் மொத்தமாக சேர்த்து மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 24-ந்தேதி வெளியிட்டது.
பெண் வக்கீல் விபிசி
இந்த மதிப்பெண் பட்டியலில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சண்முகபுரத்தை சேர்ந்த செல்வராஜ் - ஜெயஸ்ரீ தம்பதியின் மகள் எஸ்.விபிசி (வயது 25) என்ற பெண் வக்கீல் 460 மதிப்பெண்களுக்கு 323.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
விபிசி-யின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவருடைய தந்தை ஜெராக்ஸ் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். பிளஸ்-2 படிப்பை சொந்த ஊரிலேயே அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அவர், சட்டப்படிப்பை திருச்சி சட்டக்கல்லூரியில் படித்து முடித்து, சீனியர் வக்கீல் ஒருவரிடம் ஜூனியராக பணிபுரிந்து வருகிறார்.
விஷ்ணு, பிரம்மா, சிவன் என்பதன் சுருக்கமே அவருடைய பெயரின் அர்த்தம் ஆகும். சிறுவயது முதல் நீதிபதி ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசையை நோக்கி சிறுவயது முதலே கடினமாக உழைத்தார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.








