சத்துணவு ஊழியர்கள்
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.3,500 ஆக அதிகரிக்கவேண்டும், சம்பளத்தை உயர்த்தவேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சத்துணவு ஊழியர்கள் அறிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சொர்ணம், மாவட்ட செயலாளர் தேவிகா உள்பட சுமார் 20–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை சத்துணவு ஊழியர்கள் எழுப்பினர்.
அதிகாரிகள் மிரட்டல்
இதுகுறித்து மாவட்ட தலைவர் கேசவன், செயலாளர் தேவிகா ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சம்பளத்தை உயர்த்தவேண்டும், ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட எங்களுடைய வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் காலவரையற்ற போராட்டத்தினை தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளோம். சென்னையில் 568 சத்துணவு மையங்கள் உள்ளன.
இந்த மையங்களில் 1½ லட்சம் மாணவ–மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். நாங்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளதால் யாருமே வேலை செய்யவில்லை. ஆனால் சில இடங்களில் ஊழியர்களை பணியிடை நீக்கம், வேலையை விட்டு தூக்கி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டி ஊழியர்களை வேலை செய்ய வைத்துள்ளனர்.
போராட்டம் தொடரும்
சில மையங்களில் பணி ஓய்வு பெற்றவர்களையும், அனுபவம் இல்லாத நபர்களையும் வைத்து சாப்பாடு தயாரித்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு என்பது முறையாகவும், தகுதிவாய்ந்த நபர்களாலும் கவனமாக செய்யக்கூடியது. அனுபவம் இல்லாதவர்கள் தயாரித்து கொடுப்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
இன்று (வியாழக்கிழமை) சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டமும், நாளை (வெள்ளிக்கிழமை) சிறை நிரப்பும் போராட்டமும் நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளோம். மாணவர்களின் அக்கறை மற்றும் நலனை கருத்தில்கொண்டு மாநில அரசு எங்களை அழைத்து பேசி எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தக்காளி சாதம்–அவித்த முட்டை
இதற்கிடையே சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்திருந்ததை தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள சத்துணவு மையங்களில் குறைவான ஊழியர்கள் இருந்தாலும் வழக்கம்போல் மதிய உணவுகள் தயாரிக்கப்பட்டது. நேற்றைய தினம் தக்காளி சாதம் மற்றும் அவித்த முட்டை ஆகியவை தயார் செய்யப்பட்டு மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் வழக்கம்போல் மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர்.
சத்துணவு ஊழியர்கள் அறிவித்தபடி காலவரையற்ற போராட்டம் தொடங்கியபோதிலும், சென்னையை பொருத்தமட்டில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.








