ஆய்வக உதவியாளர்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் எழுத்து தேர்வு நடத்த இருக்கிறது.
தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி 1:5 என்ற விகிதத்தில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். பின்னர் மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் வழங்கப்படவேண்டிய மொத்த மதிப்பெண்கள் 25.
9 லட்சம் பேர்
தமிழ்நாடு முழுவதும் அந்தந்தமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்த மையங்களில் ஆய்வக உதவியாளர் பணிக்கு தினமும் ஏராளமானவர்கள் விண்ணப்பித்தனர்.நேற்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஏராளமானவர்கள் கூடினார்கள். உதாரணமாக சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங்க் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்க வந்தனர். விண்ணப்பதாரர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணியும் அங்கேயே நடந்தது. நேற்று மாலையில் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக புகைப்படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று விண்ணப்பித்தவர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) புகைப்படம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 9 லட்சம்பேர்வரை விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.








