விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போலியாக
126 மாணவர்களை வருகையில் காட்டி, கூடுதலாக 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து
வருவதாகவும், இந்தத் தவறைச் செய்ய மறுத்த தலைமை ஆசிரியையிடம் ராஜினாமா
கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மிரட்டுவதால், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை
என்றும், மிகுந்த மன உளச்சலில் உள்ள தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு
பள்ளி நிர்வாகமும், சக ஆசிரியர்களும்தான் காரணம் என்று தமிழக முதல்வருக்கு
அவர் சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மங்காபுரம் இந்து தொடக்கப் பள்ளி
உள்ளது. இப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக வி.அனுசுயா பணிபுரிந்து வருகிறார்.
இப் பள்ளியில் இவரையும் சேர்த்து 19 ஆசிரியர்கள் பணிபுரிந்து
வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசு ஊதியம் உள்ளிட்ட அனைத்து பண
பலன்களையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் பள்ளி வயது மாணவர்கள் (5 வயது
பூர்த்தியானவர்கள்) மட்டுமே முதல் வகுப்பில் சேர்க்க இயலும். ஆனால் இப்
பள்ளியில் பள்ளி வயது வராத (3 முதல் 4 வயதுக்குட்பட்ட) 50 மாணவர்கள் முதல்
வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் 76 மாணவர்கள் பெயர்கள் போலியாக
உள்ளது. இந்த 76 பேரை திடீரென யாராவது ஆய்வுக்கு வந்தால், இப் பள்ளியின்
வளாகத்திலேயே உள்ள மேல்நிலைப் பள்ளியில் 6-8 வகுப்பு படிக்கும் மாணவர்களை
கூட்டுக்கொண்டு வந்து அமர வைத்து கணக்கு காண்பிப்பார்களாம்.
தற்போது கல்வித் துறை ஒவ்வொரு மாணவருக்கென இ.எம்.ஐ.எஸ்.
(EMIS) எண் கணினி மூலமாக ஏற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என
உத்தரவிட்டது. இந்த எண் ஒரு முறை மட்டுமே மாணவருக்கு அளிக்கப்படும். இது
அவர் பள்ளிக் கல்வியை முடிக்கும் வரை உள்ள எண். இதில் பள்ளி வயது
பூர்த்தியாகி முறைப்படி பள்ளியில் சேர்க்கப்பட்டுவர்களுக்கு மட்டுமே வழங்க
இயலும். இது குறித்து கல்வித் துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க
அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
மேலும் இதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார்கள்.
இந்த போலி சேர்க்கையை ஜூலை மாதம் அறிந்த தலைமை ஆசிரியை,
முதல் வகுப்பு கற்றுத்தரும் ஆசிரியைகளிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
போலியான மாணவர் சேர்க்கைகளை பள்ளிப் பதிவேடுகளில் வைத்திருப்பதால், தலைமை
ஆசிரியருக்குப் பெரும் பிரச்னை ஏற்படும் என்று கூறியுள்ளார். ஆனால்
ஆசிரியைகள் நாங்கள் நிர்வாகத்திடம் சொல்லிக் கொள்கிறோம். அவர்கள்
பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்கள். மேலும் தலைமை ஆசிரியையை
மிரட்டி 701 மாணவர்கள் பதிவில் உள்ளார்கள் என்று எழுத வைத்துள்ளார்கள்.
உண்மையான பதிவை மட்டும் எழுதினால் இறுதியாக நிர்வாகம் பள்ளியில் நியமனம்
செய்து, அரசிடம் இருந்து மோசடியாக ஊதியம் பெற்று வரும் 6 ஆசிரியர்கள்
மாற்று பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.
தற்போது போலியாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கும்
அரசு வழங்கும் விலையில்லாப் பொருட்கள் அனைத்தும் பெறப்பட்டு, ஒரு குடோனில்
அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பழைய பேப்பர் கடைகளில் வழக்கமாக
நிர்வாகம் போட்டுவிடுமாம்.
இந்த போலியான மாணவர்கள் சேர்க்கையால் பள்ளியில் வேலை
செய்யும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம் ஊதியம்
கூடுதலாக வழங்கி வருகிறது. இது இப் பள்ளியில் காலம் காலமாய் நடைபெற்று
வருகிறது.
10.8.15-ம் தேதி நடைபெற்ற பள்ளி நிர்வாகிகள்
கூட்டத்தில் தலைமை ஆசிரியை அனுசுயாவை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றுக்
கொண்டு, நான் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்கிறேன் என்று எழுதி
வாங்கியுள்ளார்கள்.
தனது பணிக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில், உயிர்
மற்றும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன
உளைச்சலில் உள்ளேன். நிர்வாகம் கொடுக்கும் தொல்லையால், நான் ஏதாவது
சூழ்நிலையில் உயிரை மாய்த்துக் கொள்ள நேர்ந்தால் அதற்கு பள்ளி
நிர்வாகத்தினரே பொறுப்பு என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவின் நகல்
மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்வித் துறையின்
அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் இப் பள்ளியை உயர்நிலைக் குழு அமைத்து
தீவிர ஆய்வு நடத்தி, அரசிற்கு இது வரை கோடிக் கணக்கான ரூபாய் இழப்பை
ஏற்படுத்தியுள்ள இப் பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டும். இது போன்றும் இன்னும் எத்தனை அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மாநிலத்தில் போலியான மாணவர் பதிவில், கூடுதலாய் ஆசிரியர்கள் பணி
புரிகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். மாணவர்களின் எண்ணிக்கையை கல்வி
அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கல்வித் துறை கேட்கும். ஆனால்
பள்ளி நிர்வாகங்கள் அலுவலர்களை சரிக்கட்டி, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி
வருகிறது என்பதுதான் உண்மை.