2 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று
பெட்ரோலிய மந்திரி தெரிவித்தார். புதிய இணைப்புகளுக்கு ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கும் வசதியை அவர் தொடங்கிவைத்தார்.
ஆன்லைன் வசதி
பொதுவாக, வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்
புழக்கத்தில் உள்ளது. அதன் தற்போதைய மானிய விலையான ரூ.418 என்பது
ஏழைகளுக்கு கட்டுப்படி ஆகாது என்பதாலும், அதை தூக்கிச்செல்வது சிரமம்
என்பதாலும் 5 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அதிலும் எடை குறைவாக, 2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
புதிய
சமையல் கியாஸ் இணைப்பு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை
பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று டெல்லியில்
தொடங்கிவைத்தார். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்பட நாடு முழுவதும்
12 நகரங்களில் இவ்வசதி ஒரே நேரத்தில் அமலுக்கு வந்தது. அங்குள்ள
வாடிக்கையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம்
தர்மேந்திர பிரதான் உரையாடினார்.
2 கிலோ சிலிண்டர்
நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:–
2 கிலோ சமையல் கியாஸ்
சிலிண்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதை எளிதில்
தூக்கிச்செல்லாம். 14.2 கிலோ சிலிண்டர்களையோ, 5 கிலோ சிலிண்டர்களையோ வாங்க
முடியாத ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும்.
மேலும்,
தற்காலிக அடிப்படையில் வீடுகளுக்கு குடித்தனம் செல்லும் இடம் பெயர்ந்த
தொழிலாளர்கள், மாணவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு
முகவரி நிரூபணம் கிடையாது. அத்தகையவர்களின் சமையல் கியாஸ் தேவையை இது
பூர்த்தி செய்யும். அவர்கள், 5 கிலோ சிலிண்டரைக் கூட வாங்கிக்கொள்ளலாம்.
புதிய இணைப்பு
இனிமேல், புதிய இணைப்பு பெற கியாஸ் ஏஜென்சிகளுக்கு செல்வதற்கு
பதிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கு ‘சஹாஜ்’ என்று
பெயர். ஆன்லைன் விண்ணப்பத்தை 48 மணி நேரத்தில் சரி பார்த்து விடுவார்கள்.
அடுத்த மூன்று, நான்கு நாட்களில், பக்கத்தில் உள்ள கியாஸ் ஏஜென்சி நபர்
மூலமாக, புதிய இணைப்பு வீடு தேடி வரும்.
மேலும், கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மானியத்தை துறந்த 25 லட்சம் பேர்
வசதி படைத்தோர், சமையல் கியாஸ் மானியத்தை விட்டுத்தர வேண்டும்
என்றும், அதன்மூலம் நலிந்தோருக்கு சமையல் கியாஸ் தேவையை பூர்த்தி செய்ய
முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று,
இதுவரை 25 லட்சம் பேர் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
அவர்கள்
ஆண்டுக்கு 8 சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக வைத்துக்கொண்டால், ஒரு
சிலிண்டருக்கான மானியத்தொகை ரூ.200 வீதம், ஆண்டுக்கு ரூ.320 கோடி மிச்சம்
ஆகும்.
கியாஸ் மானியத்தை 25 லட்சம் பேர் விட்டுக்கொடுத்திருப்பதால், புதிதாக 22 லட்சம் பேருக்கு புதிய கியாஸ் இணைப்புகளை கொடுத்துள்ளோம்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.