தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா ஜெபாலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து தொலை தூரகல்வி நிறுவனங்களும் வருடந்தோறும் பல்கலைக்கழக அங்கீகாரத்தை பெறவேண்டும். அதன்படி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இந்த வருடத்திற்கான (2015-2016) அங்கீகாரத்தை இப்போது பெற்றுள்ளது. அதுபோல 67 பல்கலைக்கழகங்கள் எங்களை போன்று பெற்றுள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து, பிளஸ்-2 படித்துவிட்டு பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள்.இதுபோன்று முறையாக படித்தவர்கள் தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்தால் அந்த பட்டம் இந்தியா உள்பட எந்த நாட்டிலும், உலகம் முழுவதும் இந்த பட்டம் ஏற்றுக்கொள்ளப்படும்.அதாவது சமமான பட்டம் ஆகும்.
எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி
எங்களிடம் முறையாக படித்து பட்டம் பெற்றவர்கள் வேலைக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் உள்ளிட்ட எந்த வித தேர்வையும் எழுதலாம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி.புவியியல் படித்த மாணவர் டி.பூபாலன் 2014-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ்.தேர்வில் இந்திய அளவில் 80-வது ரேங்க் எடுத்துள்ளார். இப்போது அவர் பயிற்சியில் இருக்கிறார். விரைவில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பதவி ஏற்பார். எனவே மாணவ-மாணவிகள் யாராக இருந்தாலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படித்தவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.63 புதிய படிப்புகள்
மேலும் இந்த வருடம் புதிதாக 5 பட்டப்படிப்புகள், 18 முதுகலை படிப்புகள், 40 சான்றிதழ் படிப்புகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். மொத்தம் 63 புதிய படிப்புகள் ஆகும். மாணவர்களுக்கு படிக்க புத்தகங்களாகவும் வழங்குகிறோம். அந்த புத்தகங்களை சி.டி. வடிவிலும் கொடுக்கிறோம்.
உடனடி வேலைவாய்ப்பை பெறும் வகையில் திறன் அடிப்படையில் தொழில் கல்வி வழங்கும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தென் இந்தியாவில் முதல் முறையாக டெல்லியில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து 18 பிரிவுகளில் தொழில் சார்ந்த படிப்புகளை வழங்கி வருகிறோம். இந்த படிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட 217 சமுதாய கல்லூரிகள் வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது வருடத்திற்கு இந்த படிப்பு படித்தவர்கள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபடி மதுரை, திருச்சி, கோவை, தருமபுரி ஆகிய இடங்களில் மண்டல மையங்கள் மற்றும் சமுதாய உறுப்பு கல்லூரிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.
அந்தஸ்தை உயர்த்த ஆய்வு
அடுத்த கட்டமாக பல்கலைக்கழக அந்தஸ்தை உயர்த்துவதற்கான ஆய்வுகள் நடந்து முடிந்துள்ளன. விரைவில் பல்கலைக்கழக மானியக்குழு 12 பி. அந்தஸ்து தந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அந்தஸ்து வந்தால் பல்கலைக்கழக மானியம் வரும்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் 4 ஆயிரம் மாணவர்கள் நேரடியாக பட்டம் பெற உள்ளனர். நேரில் வராதவர்கள் உள்பட மொத்தம் 15 ஆயிரம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.
இவ்வாறு பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.








