அடிப்படை வசதிகள்
வருமானவரித்துறை அலுவலகங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருமானவரித்துறை அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் தினக்கூலி, கேசுவல் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
அலுவலகங்கள் வெறிச்சோடின
அதன்படி, நேற்று வருமான வரித்துறை அலுவலகங்கள் அனைத்தும் இயங்கவில்லை. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்மேளன கூட்டு நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்கள் எம்.எஸ்.வெங்கடேசன், ஜி.கண்ணன் ஆகியோர் கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரம் பேர் வருமான வரித்துறை அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இதில் ஆயிரம் பேர் அதிகாரிகள், 3 ஆயிரம் பேர் ஊழியர்கள் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், 2 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தான், இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தோம்.
இலக்கு பாதிக்கப்படும்
தொடர்ந்து அரசு இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், 11-ந் தேதி டெல்லியில் அகில இந்திய தலைவர்கள் கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளனர். இந்த வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றினால் வருமான வரி வசூலிக்கும் இலக்கு பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வருமான வரி வசூலிக்க வேண்டும். இதே போல், அகில இந்திய அளவில் 8 லட்சம் கோடி வருமானவரி வசூலிக்க வேண்டும். இதேபோல், தொடர்ந்து வேலைநிறுத்தம் ஏற்பட்டால், அது மிகவும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்மேளன கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.








