குறிப்பாக தென்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இன்று (புதன்கிழமை) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அனேக இடங்களில் தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதாகவும், இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இன்னும் வலுப்பெறவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். மேலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தற்போது அனேக இடங்களில் மழை பெய்ய தொடங்கி இருப்பதால், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலோர மாவட்டங்கள்
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் மறுநாளும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஆலோசனை
இந்த நிலையில் வருவாய்த்துறையின் சார்பில், மாவட்டங்களில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்டார்.
பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், வருவாய்த்துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன், முதன்மைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அதுல்யமிஸ்ரா, பேரிடர் மேலாண்மை இணை ஆணையர் ஆர்.லில்லி, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விரிவான ஆய்வு
தென்மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக, ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், கால்நடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றிற்கான சேதங்களுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டுள்ள உடனடி நிவாரண உதவிகள் குறித்தும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் எச்சரித்துள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, தொடர்புடைய மாவட்ட கலெக்டர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
நிவாரண பணிகள்
அதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பங்கேற்ற ஆய்வு கூட்டமானது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எழிலகம் வருவாய் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பருவமழை காலங்களில் போர்க்கால அடிப்படையிலான நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்படும் வீடுகள், குடிசைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கான இழப்பீடு உதவித்தொகையினை காலதாமதமின்றி விரைந்து வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.








