ரயில்வே அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு தலைமையில், ரயில்வே உயர்மட்டக் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது.அதில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பயணத்தின்போது, பயணிகளிடம் ரயில் டிக்கெட்டை, ஆர்.பி.எப்., எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் பரிசோதிக்க வேண்டும் என்ற திட்டத்தை, விரைந்து நடைமுறைப்படுத்த, சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.அப்போது, இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஆர்.பி.எப்., உயரதிகாரிகள், 'இதனால், எங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும்' என, கூறினர்.
தற்போது, விமான நிலையங்கள் மற்றும், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில், டிக்கெட் பரிசோதனை செய்யப்படுகிறது. விமான நிலையங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்த பிறகே, உள்ளே அனுப்புகின்றனர்.ஆனால், மெட்ரோ ரயில் நிலையங்களில், இந்த சோதனையை தானியங்கி இயந்திரம் செய்கிறது. அதன் அனுமதிக்குப் பிறகே, பயணிகள் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியும்.
இந்த வகையில், தற்போது, நாட்டில் உள்ள அனைத்து பெரிய ரயில் நிலையங்களிலும், விரைவில், ஆர்.பி.எப்., அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட உள்ளனர்.
ரயில்வே அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரத்தில், முக்கிய, 10 ரயில் நிலையங்களின் வருவாய், முந்தைய ஆண்டை விட, வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கான காரணம் குறித்து ஆராய, சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல பொதுமேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருவாய் குறைந்த ரயில் நிலையங்களில், டிக்கெட்
பரிசோதனையை கடுமையாக்கவும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.புதிய திட்டத்தால், ரயில்வே துறையின் வருவாயும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
* ரயில் பயணிகள், ரயில் நிலையங்கள், ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை, ஆர்.பி.எப்., மேற்கொண்டு வருகிறது. இந்த படையில் தற்போது, 65 ஆயிரம் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்
* ரயில்வே அமைச்சகத்தின் கீழ், ஆர்.பி.எப்., தவிர, ஆர்.பி.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையும் உள்ளது
* நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களின் பாதுகாப்பில், ஆர்.பி.எஸ்.எப்., அமைப்பின் 12 பிரிவுகள் மேற்கொண்டு வருகின்றன. இவற்றுடன், பெண்கள் பிரிவு உட்பட, மேலும், மூன்று படை பிரிவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.








