நாளை சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் வரும் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த முகாம் நடக்கிறது. முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளைச் செய்யலாம் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
வாக்காளர்கள் கோரிக்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்புப் பலகைகளை முகாம் நடைபெறும் இடங்களில் வைக்க வேண்டும் என வாக்காளர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விவரங்களை வாக்குச் சாவடிகளில் உள்ள அலுவலர்கள் சரிவர தெரிவிப்பதில்லை எனவும், பெயர் இருக்கிறதா என்ற தகவலைக் கூட பார்த்துச் சொல்வதற்கு அவர்களால் முடியவில்லை என்றும் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, சிறப்பு முகாம் நடக்கும் வாக்குச் சாவடிகளில் உரிய தகவல் பலகைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.








