"தரங் என்ற திட்டத்தின் கீழ் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன்), பிராட்பேண்ட், பி.போன் உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்புச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் சந்தைப் பிரிவு (Marketing Wing) பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்களின் தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி பெற்று வந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்தச் சலுகை 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதேபோல், ஓராண்டுக்கான தொலைபேசி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும்பட்சத்தில், இரண்டு மாத வாடகைக் கட்டணத்தை தள்ளுபடியாகப் பெற்றும் வந்தனர். இந்த சலுகையும், அப்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.
75 சதவீதம் அளவுக்கு சலுகைக் குறைப்பு: சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், தற்போது வழங்கப்படும் 10 சதவீத சலுகையில் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல், இந்தப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி தங்களின் தொலைபேசிக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே சலுகையாகப் பெற முடியும். இதுவரை அரசு ஊழியர்கள் பெற்று வந்த சலுகையில் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இலவச அழைப்புச் சலுகையும் குறைப்பு: வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பி.எஸ்.என்.எல்.தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் (9 முதல் 7 மணி வரை) அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதிலும், அரசு ஊழியர்களுக்கு சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் இரவு நேரத்தில் தரைவழித் தொலைபேசி வாயிலாக, பி.எஸ்.என்.எல். தொலைபேசி, செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால் மட்டுமே இலவச அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், அதற்குரியக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை: கடந்த 2004-ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.10,183 கோடியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2014-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.8,234 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நஷ்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தச் சலுகைக் குறைப்பு இருக்கலாம் என்றனர் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்.








