நெல்லையில் நடந்த ஆசிரியர்கள் மறியலின்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு 500 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் 250 பேர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள், திருச்சியில் 707பேர், நாகையில் 1,030பேர், தஞ்சையில், 850பேர், புதுக்கோட்டையில் 527பேர், கரூரில் 320 ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரியில் 190 பேர், திருப்பூரில் 1500, ஈரோட்டில் 1735, நீலகிரியில் 334, கோவையில் 950, விழுப்புரம் 800, கடலூர் 400 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, சங்கர பெருமாள் அளித்த பேட்டி: ஜாக்டோவின் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தொடர் மறியல் போராட்டத்திற்கு பிறகும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இறுதி கட்டமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், நாளை தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால் அன்றைய வகுப்புகளும் முற்றிலும் முடங்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்துணவு அமைப்பாளர்கள் வகுப்பு நடத்த உத்தரவு
நாளை வரை ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பதால் பள்ளிகளை திறந்து செயல்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள் இல்லாமல் எக்காரணத்தை கொண்டும் பள்ளிகளை மூடக்கூடாது, சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘அதிமுக அரசுக்கு பாடம் கற்பிப்போம்’
செய்வீர்களா? செய்வீர்களா? என்றால் செய்தீர்களா? செய்தீர்களா? என்று கேட்போம்
நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தன் பங்கேற்பு ஊதியத் திட்டம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என்று இன்றைய முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டது. முதல்வர் பிரசாரத்தின் போது நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்டுக் கொண்டதன்படி நாங்கள் செய்தோம். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி எங்களுக்கு செய்யவில்லை. வரும் தேர்தலில் அவர் ஓட்டு கேட்டு வந்தால் நீங்கள் ெசய்தீர்களா? நீங்கள் ெசய்தீர்களா? என கேட்போம்.
2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்களின் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் இவர்களுக்கு ஏற்கனவே நாங்கள் பாடம் கற்பித்தோம். இப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அதேபோன்ற பாடம் புகட்ட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எங்களின் ஒற்றுமையை காட்டுவோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.








