வெள்ள பாதிப்புகள் குறித்து
முன்கூட்டியே அறிந்து, மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற உதவும் புதிய
செயலியை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதிலும்
உள்ள நதிகளின் நீர்மட்டத்தை அறிய முடியும்.
கூகுள் நவ் கார்ட்ஸ் (Google now cards),
கூகுள் ஆப்ஸ், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை உலகின் முன்னணி தேடுதல்
உலவியாக திகழும் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தங்கள்
சேவையின் அடுத்த கட்டமாக, சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளின் விளைவாக,
வெள்ள பாதிப்புக்களை முன் கூட்டியே மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான
செயலியை கூகுள் வடிவமைத்துள்ளது. இந்திய வெள்ள முன்னறிவிப்பு மையத்துடன்
இணைந்து கூகுள் பயன்பாட்டாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய செயலி குறித்து கூகுள் இந்தியா
நிறுவன உற்பத்தி மேலாளர் பயல் பட்டேல் கூறுகையில், இந்திய வெள்ள
முன்னறிப்பு மையத்துடன் இணைந்து இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம்
நாடு முழுவதிலும் உள்ள 170 மையங்களில் நதிகளின் நீர்மட்டம் குறித்து
அறிந்து கொள்ள முடியும். வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து, புயல் குறித்த
முன்னெச்சரிக்கைகளையும் வழங்க உள்ளோம். இயற்கை பேரழிவுகள் குறித்து முன்
கூட்டியே அறிவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட
மழை,வெள்ளத்தின் போதும், மணிப்பூர் நிலநடுக்கத்தின் போதும் தங்களின்
பாதுகாப்பு குறித்து, தங்களின் உறவினர்களுடன் தகவல் பகிர்ந்து கொள்வதற்காக
பேஸ்புக் நிறுவனம் புதிய பக்கம் ஒன்றை துவங்கி இருந்தது இதே போன்று, இயற்கை
பேரிடர் பாதிப்புகளில் சிக்கிய தங்களின் நிலை குறித்து உறவினர்களுக்கு
தகவல் அளிக்கும் வசதி கொண்டதாகவும் இந்த செயலியை கூகுள் அமைத்துள்ளது.