தமிழகத்தில் கடந்த, 2012 - 13ம் ஆண்டில், கல்வி மேலாண்மை தொகுப்பு (எமிஸ்)க்காக, மாணவ, மாணவியரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியது. இதில், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர், உடன் பிறந்தவர்கள், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். சேகரிக்கப்படும் விவரங்களை கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வதில், பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன. சர்வர் கோளாறு காரணமாக, முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆன்லைனில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள், சர்வரில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆதார் எண் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
மேலும், இவற்றில் பழைய போட்டோக்களே உள்ளன. அதை மாற்ற நடவடிக்கை இல்லை. இதனால், தற்போது அவசர அவசரமாக நடக்கும் பணிகளும், முழுமையடைய போவதில்லை. மே முதல் வாரத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.








