சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வேட்பாளர் இறுதி பட்டியல் தயாரானதும், சென்னையில் அச்சிடப்பட்ட "பேலட் சீட்' தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், "பேலட் சீட்' பொருத்தும் பணி, நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளிலும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், இப்பணி நடைபெற்றது.திருப்பூர் வடக்கு தொகுதிக்கு, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளியில்,"ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு, மண்டல தேர்தல் அலுவலர்கள், "பேலட் சீட்' பொருத்தினர். தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ் முன்னிலையில் இப்பணி நடந்தது. தேர்தல் பார்வையாளர் குடே ஸ்ரீனிவாஷ், "ஸ்ட்ராங் ரூம்', "விவி பேட்', "பேலட் சீட்' பொருத்தும் பணியை பார்வையிட்டார்.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு, நல்லூர் மண்டல அலுவலகத்தில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் முன்னிலையில், மண்டல தேர்தல் அலுவலர்கள், இப்பணியை மேற்கொண்டனர். தேர்தல் பார்வையாளர் அகமது நதீம், ஆய்வு செய்தார்.
அவிநாசி தொகுதியில், இயந்திரத்தில் பேட்டரி மற்றும் ஓட்டுச்சீட்டு பொருத்துதல், "சீல்' வைக்கும் முறைகளை, தேர்தல் அலுவலர் அசோகன் விளக்கினார். அதன்பின், 26 மண்டல அலுவலர்களும், தங்களுக்கு வழங்கப்பட்ட இயந்திரங்களில், ஓட்டுச்சீட்டுகளை பொருத்தி "சீல்' வைத்தனர். இதேபோல், மற்ற ஐந்து தொகுதிகளிலும் நடந்தது.
வரிசை எண், வேட்பாளர் பெயர், போட்டோ மற்றும் சின்னத்துடன் கூடிய, "பேலட் சீட்' டில், தேர்தல் நடத்தும் அலுவலர் கையொப்பமிட்டு வழங்கினர். "பேலட் யூனிட்'டில் உள்ள கண்ணாடி கதவை திறந்து, "பேலட் சீட்'வைத்து, பின்புறமாக நூல் கயிற்றில் பிணைத்து, "டேக்' வைத்து, சீலிடப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர், "பெல்'அதிகாரி கையொப்பமிட்ட, "பிங்க் பேப்பர் சீல்' ஒட்டப்பட்டது. மேலும், இரண்டு இடங்களில் நூல் கயிற்றால் கட்டி, அரக்கு "சீல்' வைத்து "டேக்' பொருத்தப்பட்டது.
பேட்டரி பொருத்தம்
"கன்ட்ரோல் யூனிட்'டில் இருந்த பழைய "பேட்டரி' கழற்றப்பட்டு, புதியவை பொருத்தப்பட்டன. ஒயர்களை இணைத்து பார்த்து, சரியாக ஓட்டுப்பதிவு நடப்பது உறுதி செய்யப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதிநிதிகள், தங்களது வேட்பாளருக்கு ஓட்டளித்து, "கன்ட்ரோல் யூனிட்'டில் ஓட்டுப்பதிவாவதை உறுதி செய்து கொண்டனர்.
"பேலட் சீட்' பொருத்தியதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தகர பெட்டிக்குள் வைத்து, மீண்டும்"ஸ்ட்ராங் ரூம்'மில் வைத்து, அறைக்கு "சீல்' வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் பயன்படுத்த, 3,306 "பேலட் யூனிட்'கள்; 2,673"கன்ட்ரோல் யூனிட்'கள் தயார்படுத்தப்பட்டுள்ளன









