மருத்துவ படிப்புக்கான சேர்க்கை எப்போது ?நுழைவு தேர்வு பீதியில் மாணவர்கள்:

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்
தேர்வான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படுமா என தெரியாததால்,
மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து அரசு
மருத்துவக் கல்லுாரிகளிலும், மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழான, 15
சதவீதம் இடங்களுக்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு
மதிப்பெண் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 85 சதவீத...
தமிழகம்
உட்பட சில மாநிலங்களின் மருத்துவக் கல்லுாரிகளில் மீதமுள்ள, 85 சதவீத
இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில்,
'அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில்,
அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த
வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே,
இம்மாதம், 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத்
தேர்வு நடந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், ஜூலை, 24ல்
இரண்டாம் கட்டமாக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளன.
குழப்பம்எனினும், கிராமப்புற மாணவர்களின் நலன்
கருதி, தேர்வு முறையில் சில மாற்றங்களை அமல்படுத்தவும், இத்தேர்வுக்கான
வினாத்தாள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமல்லாது, பிற
மொழிகளிலும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது
குறித்த வழக்கு, விசாரணையில் உள்ளதால், தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரி
மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா; மாணவர் சேர்க்கை
கவுன்சிலிங் எப்போது என, எந்த அறிவிப்புகளையும் அரசு வெளியிடவில்லை. அதனால்
மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
மே 14ல் உண்ணாவிரதம்
'நீட்'
தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர்,
டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:'மருத்துவப் படிப்பில் சேர, தேசிய அளவிலான
பொது நுழைவுத் தேர்வு கட்டாயம்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு, மாநில
உரிமையை பறிக்கும் செயல். நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத் திட்டம்
இல்லாத நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய அரசுக்கு திரும்ப
வாய்ப்புள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்
சேர்க்கை தொடர வேண்டும். பார்லிமென்டில், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
இதை வலியுறுத்தி, மே, 14ல், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்,
உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -