சங்கராபுரம்;கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்தாச்சு.
அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அரசு தொடக்கப்
பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. ஒரு
மாணவிக்கு, இரு ஆசிரியர்கள் உள்ளனர். எல்லா வசதிகள் இருந்தும், அரசு
பள்ளிகளை கண்டுகொள்வதில்லை என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.மாணவர்
சேர்க்கைக்காக, ஆசிரியர்கள், கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்தும்,
பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில்,
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொடியனுார் கிராமத்தில் உள்ள,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மீது, சுற்றுவட்டார மக்களின் பார்வை
திரும்பி உள்ளது. இந்த பள்ளியில், 5ம் வகுப்பு வரை உள்ளது. இதன் தலைமை
ஆசிரியராக சுரேஷ் பணிபுரிகிறார்.
கோடை விடுமுறையின்போது, கிராமம்
முழுவதும் சென்று, 'கொடியனுார் பள்ளியில் புதிதாக மாணவர்களை சேர்த்தால்,
ஒரு மாணவருக்கு, தலா,1,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என, கிராம
மக்களிடம், தலைமை ஆசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.
இதை
ஏற்றுக் கொண்ட பெற்றோர், கடந்த, 1ம் தேதியன்று, பள்ளி திறக்கப்பட்டதும்,
தங்கள் பிள்ளைகளை வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல், கொடியனுார்
அரசுதொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.பள்ளி திறந்த முதல், இரு
நாட்களில் மட்டும், 10 மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
ஒவ்வொரு மாணவருக்கும், தான் அறிவித்தது போல, தன் சொந்த பணத்தில், தலா,
1,000 ரூபாயை சுரேஷ் வழங்கினார்.
இதனால், இப்பள்ளியில் பெற்றோர்
தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்க்கின்றனர். ஓட்டுக்காக, பணம் பட்டுவாடா
செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில், எதிர்கால சமுதாயம் நன்றாக இருக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும், தலைமை ஆசிரியரின் இந்த முயற்சி
பாராட்டுக்குரியது.