பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை
தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., -
என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்புகளில்
சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல்
படுத்தப்படுகிறது.இதில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா,
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மாநில அரசு
பாடத்திட்ட மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 1 படிக்கும் போதே, இந்த
திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு
இரு ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது. அவர்கள், உதான் திட்ட வகுப்புகளில்,
கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். ஆன்-லைன் வழியாகவும், நேரடியாகவும் சிறப்பு
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், 'டேப்லெட்' இலவசமாக
வழங்கப்படும். சந்தேகங்களை தெளிவுபடுத்த, 'ஹெல்ப் லைன்' வசதியும் உண்டு.
இதில் பயன்பெற விரும்பும் மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில்
குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்; கணிதம், அறிவியல் பாடங்களில், 80 சதவீத
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும்
அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.இந்த ஆண்டு சேர விரும்பும்
மாணவியருக்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 4ம் தேதி துவங்கியுள்ளது.வரும் 13ம்
தேதி வரை, www.cbseacademic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.