உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என,
ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும்
விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மின் வாரியம் சார்பில்
இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.
தமிழக
தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும்,
28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்,
தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
இந்த மூன்று
தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது
என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து
தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே
அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே
அறிவிக்கப்பட்டது. ஆனால்,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.,யை
பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை
குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை
அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை
அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.







