தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில்
உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான 'சிடி'க்கள் தொகுப்பை மாநில
கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,)
தயாரித்துள்ளது.
தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும்
'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள்
அதிகம் பயன்படுகின்றன.ஆனால் பேச்சு வழக்கில் இந்த எழுத்துக்களின் தன்மை
குறைந்து உச்சரிப்பு மருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ் எழுத்துக்களை
உரிய ஓசை, ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.சைகை முறை:
இதை
தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30
நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில்
அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும் மெய்
எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள் உருவாக்கப்பட்டு
வருகின்றன.இப்பணியில் எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல (லாங்குவேஜ்செல்)
ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநுாலின்
அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப் பில் சி.டி.,
தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவ்வாரத்தில்
பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்பட உள்ளன.
தொழில்நுட்ப இயக்குனர்
அமலம் ஜெரோம் கூறியதாவது:எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காது கேளாத, வாய்
பேசாத மாணவர்களுக்கு கற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல்
மற்றும் உடல் மொழி ரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான
உச்சரிப்புடன் எழுத்துக்களை எளிதில் புரிய வைத்து பிழையின்றி எழுதுவதற்கு
'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ள
பின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்ப உத்திகளுடன் 'சிடி' க்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.