அக்டோபர் 10 உலக மனநலம் நாள்
உடல்நலத்தை மட்டுமல்ல; மனநலத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இன்றைய நவீன காலத்தில் இருக்கிறோம். இன்று உலக மனநலம் நாளாக கொண்டாடப்படுகிறது. மன நலத்தைக் காக்க வேண்டிய அவசியம் பற்றியும், மனநல பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்தும் ‘மைண்ட் ஜோன்’ உளவியல் ஆலோசக மருத்துவமனையின் மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார், உளவியல் நிபுணர் ஜெயசுதா காமராஜ் ஆகிய இருவரும் நம்மிடம் பேசினார்கள்...
சிறு வயதில் ஏற்படும் அனுபவங்கள், தாக்கங்கள், ஏமாற்றங்கள், துன்பங்கள்கூட பிற்காலத்தில் மனநலத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்களாக அமையும் என்கிறார்கள். சமூக மாற்றங்களும் சிலருக்கு காரணமாக அமைகிறது. உறவுமுறைகள் குறைந்து போனது, கூட்டுக்குடும்பங்கள் குறைந்து தனிக்குடும்பங்கள் ஆனதால் அன்பு செலுத்த ஆட்கள் குறைந்து போவதாலும், தனிப்பட்ட முறையில் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆட்கள் இல்லாததும்கூட மனநலப் பிரச்னைகள் மக்களிடையே ஏற்பட அதிகமான காரணங்களாகும். உலகில் நான்கில் ஒருவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. சிலருக்கு தலையில் ஏற்படும் காயங்கள், விபத்துகள், மூளையில் ஏதாவது நோய்கள் ஏற்பட்டால்கூட மனநலம் பாதிக்கப்படலாம். எப்படி இருப்பினும் தகுந்த உளவியல் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் அதில் இருந்து மீண்டு வரலாம்.
இதனால் இந்த வருடம் மனநல முதலுதவியைக் கொடுக்க வலியுறுத்தியுள்ளது உலகச் சுகாதார நிறுவனம். ஒருவர் ஏதாவது விபத்தில் சிக்குகிறார் என்றால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்வோம். ஏனெனில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் வெளிப்படையாகத் தெரியும். அதற்கு முதலுதவியைச் செய்துவிடலாம். ஆனால், ஒருவருக்கு மனநலத்தில் ஏற்படும் பிரச்னைகளோ அல்லது மனநோயின் ஆரம்ப அறிகுறிகளோ இருந்தால் அவர்களுக்கு மனரீதியான முதலுதவி தேவைப்படும். அதை சரியாகச் செய்துவிட்டால் அவர்கள் தற்கொலை, கொலை போன்ற தவறான முடிவுகளில் இருந்தோ அல்லது தீய எண்ணங்களில் இருந்தோ தடுத்து காப்பாற்றி விடலாம். இதனால் ‘மைண்ட் ஜோன்’ உளவியல் ஆலோசக மருத்துவமனை சார்பில் இன்று மனநலத்துக்கான முதலுதவியை எப்படி கொடுக்கலாம் என்று முகாமை நடத்த இருக்கிறோம். இதனால் பல நபர்கள் இனி சென்னையிலும் பயன்பெறுவார்கள்.
இந்த கால இளைஞர்களுக்கு நிறைய மன அழுத்தம் உள்ளது. இடைவிடாத வேலை, பொருளாதார நெருக்கடி, எதிர்பாராத ஏமாற்றங்கள் கூட மனநிலையைச் சிக்கலாக்குகின்றன. எங்களிடம் 20 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு யாரை பார்த்தாலும் பயம், யாருடன் பேசவும் பயம், சமுதாயத்துடன் ஒன்றமுடியாத நிலையில் இருந்தார். அவரை விசாரித்து பார்த்தபோது அவரது பெற்றோர் அவரை மிகவும் கண்டிப்புடன் வளர்க்க முற்பட்டுள்ளார்கள். யாரிடமும் தேவையின்றி பேசக்கூடாது என எச்சரித்து வளர்த்துள்ளார்கள். இந்த எச்சரிக்கை, காலப்போக்கில் அவருக்கு மனரீதியான பயம் வளர காரணமாக அமைந்து விட்டது. இப்படி பல உளவியல் சிக்கல்கள் வெளியில் தெரியாமல் இருக்கும். ஒருநாள் அதன் பிரச்னையைக் காட்டும். சின்ன பயங்கள், சின்ன சந்தேகங்கள், சிறிய கோபங்கள், உறவுச்சிக்கல்கள் கூட இப்படி ஒருநாள் மன நிலையைப் பாதிக்கக்கூடும். எனவே விஷயங்கள் சின்னதாக இருக்கும்போதே உளவியல் ரீதியான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் பின்னால் பெரிய அளவில் வரக்கூடிய மன நோய்களைத் தவிர்த்து விடலாம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருந்துகள் தேவைப்படாது. உளவியல் ரீதியான ஆலோசனைகள் கொடுத்தே சரி செய்து விடலாம். உடலைக் கவனிக்கும் அதே முக்கியத்துவத்துடன் மனநலத்தையும் காக்க வேண்டும் என்பதே உளவியல் மருத்துவத்தின் முக்கிய குறிக்கோளாகும்” என்றார்கள்








