
தமிழகம்
முழுவதும், தட்டம்மை நோய்க்கான, 'ரூபெல்லா' தடுப்பூசி, 60 லட்சம்
குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது' என, சுகாதார துறை இயக்குனர் தெரிவித்தார்.
தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக
சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து,
'மீசில்ஸ்
ரூபெல்லா' தடுப்பூசி போடப்படுகிறது. இதை, ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த
குழந்தைகள் முதல், 15 வயதிற்கு உட்பட்டோர் வரை போட்டு கொள்ளலாம். மாநில
முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார்
பள்ளிகள், 11 அங்கன்வாடி மையங்கள் என, 68 ஆயிரம் இடங்களில், பிப்., 6
முதல், இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனர் குழந்தைசாமி
கூறியதாவது:ரூபெல்லா தடுப்பூசி குறித்து பரவிய வதந்தியால், மக்கள் தயக்கம்
காட்டினர். தற்போது, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதை
பார்த்து, தடுப்பூசி போடப்படும் இடம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இதுவரை, 60 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள்
ஆர்வம் காட்டுவதால், அனைத்து குழந்தைகளுக்கும் ரூபெல்லா தடுப்பூசி
போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் ஆய்வு! : 'ரூபெல்லா' தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை கண்டறிய,
வீடுதோறும் ஆய்வு நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில்
தடுப்பூசி போடாமல் விடுபட்டுள்ள குழந்தைகள் குறித்து, கணக்கு
எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
விபரம் தயாரித்து, சுகாதாரத் துறை வசம் ஒப்படைக்க உள்ளனர். அவர்கள், வீடு
வீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னையில் 1.5 லட்சம்! : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1.5
லட்சம் குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 'அனைத்து
குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி போடப்படும்' என, மாநகராட்சி சுகாதார
அதிகாரிகள் தெரிவித்தனர்.