நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி
மகன் காளிமுத்து (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள
வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி
வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த
7ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில்
காளிமுத்துவும் கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம்
இல்லையென்றால் ஆசிரியர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என பேசினாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய
காளிமுத்து வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு
சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கு
மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த அவரது உறவினர்கள் அவரை
மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல்
சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு நேற்று காலை காளிமுத்து இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர்
முருகேசன் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை
மாவட்ட ஆசிரியர் தற்கொலை செய்தது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.
ஆசிரியர் தற்கொலை விவகாரம் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக காளிமுத்து மதுவுடன்
பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டதாக சிவகிரி
போலீசார் தெரிவித்தனர்.