அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள்
திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளன்று
3-வது பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 8-ம்
தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அரையாண்டு விடுமுறையும்
அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் ஜனவரி 1-ம் தேதி வரை
அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 நாள் விடுமுறை முடிந்து தமிழகம்
முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் 9-ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, 3-வது பருவத்துக்கான (ஜனவரி முதல் மார்ச் வரை)
புத்தகங்கள், பள்ளி திறந்த முதல் நாள் அன்றே வழங்கப்பட்டன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுகன்யா கூறும்போது, “அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கான 3-வது பருவ பாடப்புத்தகங்கள் முன்கூட்டியே மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்
ஒப்படைக்கப்பட்டன. மாணவர்களின் வசதியை கருத்தில்கொண்டு முதல் நாளன்று
அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. தமிழகம் முழுவதும் 24 லட்சத்து 39
ஆயிரத்து 372 மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 56 லட்சத்து 52 ஆயிரத்து 742
பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன” என்றார்.
ஜன. 18 முதல் திருப்புதல் தேர்வு
அரையாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2
ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் முதலாவது திருப்புதல் தேர்வு ஜனவரி 18-ம்
தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வி
இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.