பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி ஆலோசனை குழுவின் 65-வது கூட்டம் மத்திய மனிதவளத்துறை
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. அதில், அனைவருக்கும் கல்வி
உரிமை சட்டம் 2009–ல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
என்றும், பிள்ளைகளை சரியாக பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனைவழங்கும்
வகையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்புவரை இலவசமாக கல்வி வழங்க
மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்
குழந்தைகளுக்கென சிறப்பு நவோதயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றும்
பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொடக்கப்பள்ளி பயிலும் அனைத்து மணவர்களும் மேல்நிலை கல்வி
வரை தொடர்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதாகவும், குறிப்பாக பொருளாதார
சிக்கல்களை கருத்தில் கொண்டு, மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறப்பு
ஒதுக்கீடுகள் இடம்பெற வேண்டும் என்றும் ஆலோசனை குழு வலியுறுத்தியுள்ளது.
படிப்பை தொடர இயலாத மாணவர்களுக்கென தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள்
தொடங்கப்பட்டு, வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல மதிய உணவு திட்டத்தை 9-12
வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய கல்வி ஆலோசனை
குழு பரிந்துரைத்துள்ளது.







