தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வரும்
கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடத்
திட்டம் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்
என்.ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் மாணவர்களைவிட பெற்றோரே இன்றைக்கு அதிக குழப்பத்திலும்,
கலக்கத்திலும் உள்ளனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி
மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு அவசியம் என்ற நிலை உருவாகி
விட்டது.
தங்கள் பிள்ளைகள் உயர்தொழில்நுட்பக் கல்வி பெற பள்ளித் தேர்வில்
மட்டுமின்றி, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துள்ளனர்.
தமிழக அரசும் பள்ளி கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து
உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
மேற்கொண்டுள்ள நடவடிக்கை பள்ளிக் கல்வியில் வியக்கத்தக்க மறுமலர்ச்சியை
ஏற்படுத்தும்.
வரும் கல்வி ஆண்டில் 1 முதல் பிளஸ் 2 வரை ஒற்றை இலக்க வகுப்புகளில் 1, 3,
5, 7, 9, 11 ஆகிய வகுப்புகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய பாடத் திட்டம் சி.பி.எஸ்.சி. பாடத்
திட்டத்துக்கு நிகராக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கும்
வகையில், அவர்களை மேம்படுத்தும் பெரும் பொறுப்பை ஆசிரியர்கள் சவாலாக ஏற்று
சிறப்பாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.








